×

“பெருமாளை வழிபட்டால் பெருவாழ்வு கிட்டும்”

?ஒரு நண்பர் வீட்டு கிரஹப்ரவேசத்திற்கு சென்ற என் மகன் அந்த வீட்டுப் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அங்கேயே தங்கிவிட்டான். அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரு குழந்தைகள் உண்டு. குடும்பக் கட்டுப்பாடும் செய்து கொண்டவர். என் மகனை மீட்க சட்ட ரீதியாக முயற்சி செய்தும் முடியவில்லை. இதற்கு ஒரு முடிவு கூறுங்கள்.
- விருதுநகர் மாவட்ட வாசகர்.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதக பலத்தின்படி அவரை யாராலும் ஏமாற்ற முடியாது. யாரும் அவரை ஏமாற்றியோ அல்லது வசியப்படுத்தியோ தங்க வைத்துக் கொள்ளவில்லை. அவராகவே விரும்பி அந்தப் பெண்ணுடன் வசித்து வருவதாகவே தோன்றுகிறது. உங்களுடைய பிள்ளைப் பாசம் மற்றும் உள்ளத்து உணர்வினை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. தற்பொழுது 39 வயதாகும் உங்கள் மகன் கடந்த 12 ஆண்டுகளாக அவர்கள் வீட்டிலேயே இருக்கும்பொழுது சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள். உங்கள் மகனின் ஜாதகப்படி அவர் வேலை ஏதும் பார்க்காமல் வெறுமனே அமர்ந்து இருப்பது போல் தெரியவில்லை. உழைப்பாளி மற்றும் திறமைசாலியான அவர் தனது உழைப்பிலேயே வாழ்ந்து வருகிறார். அவருக்குப் பிடித்த வாழ்வினை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார். உங்கள் மகனை அவரது பாதையிலேயே செல்ல அனுமதிப்பதோடு பெற்றோர் என்ற முறையில் மனப்பூர்வமான ஆசிர்வாதத்தையும்
அருளுங்கள். தனியாக பரிகாரம் ஏதும் தேவையில்லை.

?35 வயதாகும் நான் தனியார் அலுவலகத்தில் பணி புரிகிறேன். எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் நிற்பதில்லை. பெற்றோர் இறந்துவிட்டனர். மனைவியும் பிரிந்துவிட்டார். என் வாழ்வே கேள்விக்குறி ஆகிவிட்டது. இந்நிலை மாறுமா? நல்வழி காட்டுங்கள்.
- காரல்மார்க்ஸ், பெங்களூரு.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் புதன் புக்தி தொடங்கி உள்ளது. கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சனி தசையில் பல்வேறு சிரமங்களையும் சந்தித்து வந்துள்ளீர்கள். எட்டாம் வீட்டில் கேதுவுடன் இணைந்த சனியால் உங்கள் நடவடிக்கைகள் யாவும் அடுத்தவர்கள் விரும்பத்தகாத வகையில் அமைந்திருக்கிறது. சம்பாதிக்கும் காசு கையில் நிற்காததன் காரணம் உங்களின் எதிர்மறையான நடவடிக்கைகளே ஆகும். ஆனால் தற்போது நல்ல நேரம் என்பது துவங்கி உள்ளதால் இனிமேல் கவலை கொள்ளத் தேவையில்லை. உங்கள் மனைவியின் ஜாதகக் குறிப்போ விபரத்தையோ நீங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை. நீங்கள் உறவு முறையில் திருமணம் செய்திருந்தால் பிரிந்து சென்ற மனைவி தற்போது திரும்பி வந்து நல்ல படியாக வாழ்வதற்கான வாய்ப்பு உண்டு. அப்படி இல்லை என்றால் உறவு முறையில் இருந்து ஒரு பெண் உங்கள் வாழ்வினில் தற்போது வருவார். வருகின்ற பெண்ணை கரம்பிடிப்பதோடு அவர் சொல்படி நடந்து வாருங்கள். ஒரு பெண்ணாலேயே உங்கள் வாழ்வினில் நல்லதொரு மாற்றத்தைத்தர இயலும். புதன்கிழமை தோறும் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவதோடு கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கி வாருங்கள். உங்கள் வாழ்வினில் மறுமலர்ச்சி உண்டாகக் காண்பீர்கள்.

“யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத்
விமுச்யதே நமஸ்தஸ்மை விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே”

?எனக்கு நான்கு ஆண்டுகளாக பெண் பார்த்து வருகிறார்கள். எதுவும் அமையவில்லை. நான் சந்நியாசியாக போகவேண்டும் என்று ஒரு பெண் ஜோதிடர் கூறினார். நான் வேலைக்கு போகும் வழியில் அடிக்கடி ஒரு சந்நியாசியைப் பார்க்கிறேன். மனதில் கவலையாக உள்ளது. திருமணம் நடந்தால் என் வாழ்வு சிறப்பாக அமையும் என நினைக்கிறேன். வழி கூறுங்கள்.
- மனோகரன், மேட்டூர்.

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் சந்நியாச யோகம் என்பது கிடையாது. சந்நியாச யோகம் என்பது திருமணம் நடக்காமல் இருப்பது அல்ல, திருமண வாழ்வின் மீதே பற்றில்லாமல் இன்னும் சொல்லப்போனால் எதன் மீதுமே பற்றில்லாமல் இருப்பதே ஆகும். நீங்கள் நல்ல வேலையில் உள்ளீர்கள். நன்றாக சம்பாதிக்கிறீர்கள், திருமணம் செய்துகொள்ளவும் விரும்புகிறீர்கள். இந்நிலையில் சந்நியாச யோகம் என்ற பேச்சிற்கே இடமில்லை. திருமணத்தைப் பற்றிச்சொல்லும் ஏழாம் வீட்டில் சூரியன் உச்ச பலத்துடன் சஞ்சரிப்பதால் அதிகார குணம் கொண்ட ஒரு பெண்ணை கரம் பிடிப்பீர்கள் என்பதே உங்கள் ஜாதகத்திற்கான பலன் ஆகும். அதிகார குணம் கொண்டிருந்தாலும் குடும்ப கௌரவத்திற்கு முக்கியத்துவம் அளித்து செயல்படும் பெண்ணாக இருப்பார். திருமணத்திற்குப் பின் குடும்பப் பொறுப்புகளை நீங்கள் அவரை நம்பி ஒப்படைத்துவிடலாம். நீங்கள் பிறந்த ஊரில் இருந்து கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் இருந்து பெண் அமைவார். பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்கு அபிஷேகத்திற்கு பன்னீர் வாங்கித் தந்து வழிபட்டு வாருங்கள். 19.03.2021க்குள் உங்கள் திருமணம் முடிவாகிவிடும்.

?எனது ஒரே மகன் கல்வி நிலையிலும் நன்னடத்தையிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளான். ஏழாம் வகுப்பிலும் அவன் பல பாடங்களில் சரியான தேர்ச்சியைப் பெறவில்லை. அவனுடைய எதிர்காலம் பற்றி மிகவும் கவலையாக உள்ளது. இந்நிலை உண்டானதற்கு ஜாதகம் காரணமா? உரிய பரிகாரம் கூறுங்கள்.
- வெங்கடரமணி, புதுடெல்லி.

உங்கள் மகனின் இந்த நிலைக்கு ஜாதக அமைப்பு மட்டும் காரணமில்லை. தந்தையாகிய நீங்களும் ஒரு விதத்தில் காரணமாகிறீர்கள். எல்லாமே சரியாக அமைய வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் அதனை நாம்தான் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள். மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சனி புக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. கிரஹ நிலையின்படி வருகின்ற 15.09.2020 முதல் அவரது நடவடிக்கையில் நல்லதொரு மாற்றத்தினைக் காண்பீர்கள். ஜென்ம லக்னாதிபதி புதன் நீசம் பெற்றாலும் ஜீவன ஸ்தானம் ஆகிய 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதும் உச்சம் பெற்ற சூரியன் 11ல் இருப்பதும் ஆட்சி பெற்ற சுக்கிரன் 12ல் இருப்பதும் அவரது எதிர்கால வாழ்வினை வெகு சிறப்பான முறையில் வைத்திருக்கும். 22வது வயது வரை நடக்கும் ராகு தசை என்பது அவரை சற்று திசை திருப்பினாலும் அடிப்படையில் நல்ல குணம் கொண்டவர் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. சிறு பிள்ளை செய்யும் தவறுகளை பெரிதுபடுத்தாமல் அன்பான முறையில் சொல்லி அவரை நல்வழிப்படுத்துங்கள். அலுவலகத்தில் உண்டாகும் டென்ஷனை குடும்பத்தில் வெளிப்படுத்தாதீர்கள். தந்தையின் அன்பும் அரவணைப்பும் மட்டுமே உங்கள் பிள்ளையின் எதிர்கால வாழ்வினை தீர்மானிக்கும். செவ்வாய் தோறும் உங்கள் மகனை அருகிலுள்ள துர்கையம்மனின் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று வணங்கி வரச் செய்வதோடு கீழ்க்கண்ட ஒற்றை வரி மந்திரத்தைச் சொல்லி வர பிள்ளையைப் பற்றிய மனக்கவலை அகலும்.
“துர்க்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே...”

திருக்கோவிலூர்
ஹரிபிரசாத் சர்மா

Tags :
× RELATED துலாம் ராசியினர் குணத்தில் அமைதி, செயலில் வேகம்!