×

தீராத நோய்களை தீர்த்து வைக்கிறார் சிங்கிகுளம் கைலாசநாதர் சுவாமி

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே சிங்கிகுளம் பச்சையாற்றின் கரையில் இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் அருள்மிகு கைலாசநாதர், ஆவுடையம்பாள் திருக்கோவில் அமைந்துள்ளது. 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படும் சிவஸ்தலமான கைலாசநாதர் கோவில் பழங்கால கலை பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது. ஆன்மிகம் மற்றும் கலைகளின் கருவூலமாக திகழும் இந்த கோயிலில் ஆடல் வல்லான் எம்பெருமான் ஈசன் கைலாசநாதராகவும், பக்தர்களின் பக்திக்கு இறங்கும் பார்வதி தேவியார் ஆவுடையம்பாளாகவும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.

முன் ஒரு காலத்தில் பூலம் பகுதியில் சவுந்தரபாண்டிய மன்னர் நல்லாட்சி செய்து வந்தார். அவரது அரண்மனையில் ஏராளமான பசுக்களை வளர்த்து வந்தார். இவைகளை பணியாளர்கள் மேய்ச்சலுக்காக சிங்கிகுளம் பச்சையாற்றின் கரைக்கு அழைத்து செல்வது வழக்கம். அதில் ஒரு பசு மட்டும் தினசரி புதருக்குள் சென்று தானாக பால் சுரந்துள்ளது. இதைப்பார்த்த பணியாளர்கள் மன்னரிடம் சென்று கூறினர், இதைக்கேட்டு அதிசயித்த மன்னர் உடனடியாக வீரர்களை அனுப்பி புதரை அகற்றிய போது அங்கு வில்வ மரத்தின் அடியில். சிவலிங்கம் வெளிபட்டது.  

அதைப்பார்த்து மெய்சிலித்த மன்னர் அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பச்சையாற்றின் கரையில் எம்பெருமானுக்கு இக்கோயிலை கட்டியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. சிவலிங்கம் மறைந்திருந்த வில்வ மரமே கோவிலின் ஸ்தல விருட்சமாக திகழ்கிறது. தென் மாவட்டங்களில் பிரசித்திப்பெற்ற சிவஸ்தலமாகவும், பச்சையாற்றின் கரையில் உள்ள பஞ்சலிங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் திகழும் இக்கோயில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாகும். தமிழகத்தில் ஒரு சில கோவில்கள் மட்டுமே இவ்வாறு மேற்கு நோக்கி அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

அதுபோல மேற்கு வாசலே கோவிலின் பிரதான வாசலாக அமைக்கப்பட்டுள்ளது. கைலாசநாதர் சன்னதியும், ஆவுடையம்பாள் சன்னதியும் மேற்கு நோக்கியே உள்ளன. இங்கு எழுந்தருளியுள்ள கைலாசநாதர் முன் காலத்தில் சிங்கி தேவன் என்று அழைக்கப்பட்டுள்ளார். இதில் உள்ள சிங்கி என்பது பார்வதியையும், தேவன் என்பது சிவனையும் குறிக்கும் என்று பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். அவரது பெயராலேயே சிங்கிகுளமும், சிங்கிமாநகர் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. அதன் பின்னர் காலப்போக்கில் இறைவன் கைலாசநாதராகவும், சிங்கிமாநகர், சிங்கிகுளம் என்றும் மருவியதாக கல்வெட்டு தகவல்கள் கூறுகின்றன.

கோயிலின் உள்பகுதியில் சுவாமி, அம்பாள் சன்னதிகள் அழகு பெற அமைந்துள்ளன. சுவாமி சன்னதி முன்பு கைலாசநாதரை நோக்கியவாறு நந்தியம்பெருமான் காட்சி தருகிறார். கோயிலை சுற்றி வலம் வர பிரகாரங்களும் வடிமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தில் முழுமுதற் கடவுளான விநாயகரும், ஆறுமுக தெய்வமான முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை அம்மன்களுடன் தனித்தனி சன்னதி கொண்டுள்ளனர். அத்துடன் தெட்சிணாமுர்த்தி, மகாலிங்கம், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், சனிஸ்வரர், பைரவர், தர்மசாஸ்தா மற்றும் பரிவார மூர்த்திகளும் சன்னதி கொண்டுள்ளனர். இத்திருத்தலத்தில் பஞ்சலிங்கமும் உள்ளது மற்றொரு சிறப்பு அம்சமாகும்.

இந்த திருத்தலத்தில் ராஜகோபுரம் இல்லை, அதற்கு ஈடாக சுவாமி, அம்பாள் மற்றும் தர்மசாஸ்தா சன்னதிகளில் கோபுரங்கள் உள்ளன. ஒவ்வொரு மாத பிரதோஷ பூஜையின் போதும், மாலையில் மறையும் சூரியனின் ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது படர்வது எம்பெருமானை சூரியன் தரிசித்து செல்வது போல் உள்ளதாக பக்தர்கள் பரவசத்துடன் தெரிவிக்கின்றனர். சிங்கிகுளத்திற்கு வந்து கைலாசநாதர், ஆவுடையம்பாளை வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்றும் நம்மை தொடரும் பிணிகள் அகலும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை ஆகும். அத்துடன் திருமண தடை அகலும் என்பதும், சகல வளங்களும் கிடைக்கும் என்பதும் ஐதீகமாகும்.

Tags : Sinkikulam Kailasanathar Swamy ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்