×

விஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் பெருமாள்

நாகர்கோவில் கோட்டார் வாகையடித்தெரு பகுதியில் பொன்பொருந்தி நின்றருளியபிரான் பெருமாள் கோயில் உள்ளது. கோயில் இருக்கும் இடம் ஏழகரம் எனப்படும். கோயில் கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், முகமண்டபம் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்று அமைந்தது. கோயில் மூலவர் கிழக்கு பார்த்து இருக்கிறார்.

வெளிப்பிரகார அமைப்பில் புதிதாக கட்டப்பட்ட கோபுரம் உண்டு. கோயிலைச்சுற்றி உயரமான கல் மதில் சுவர் உண்டு. வெளிப்பிரகாரம் மரங்களும், செடிகளும் நிறைந்தது. அழகான தோற்றத்துடன் உள்ளது. கோயில் அலுவலகம், வடக்கு பிரகாரத்தில் உள்ளது. அடுத்து இருக்கும் முகமண்டபம் 6 தூண்களை கொண்டது. இதை அடுத்து இருப்பது அர்த்த மண்டபம்.

மண்டபத்தின் கருவறையை ஒட்டிய வடக்கு பக்கத்தில் விழாக்கால படிமங்கள் உள்ளன. கருவறை சிறியது. அந்தராளம் நீண்ட அமைப்புடையது. கருவறையைச் சுற்றி உட்பிரகாரம் உண்டு. இது கல்மண்டபம். கருவறை சுவர் பிற்கால பாண்டியர் கட்டுமானப் பணியாகும். உட்பிரகாரத்திற்கும், கருவறைக்கும் நடுவில் மேல்கூரையில்லா சிறிய இடைவெளி உண்டு.

இதை ஒரு சிறுபிரகாரம் ஆகவும் கருதலாம். கருவறை மூலவர் விஷ்ணு, பொன்பொருந்தி நின்றருளிய பிரான் எனப்படுகிறார். மூலவர் நின்ற கோலம், நான்கு கைகள், சங்கு, சக்கரம் அபய வரத முத்திரையுடன் காட்சி தருகிறார். மூலவரின் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவியர் நிற்கின்றனர்.
இருவரும் நீலோர்பவ மலர் ஏந்தியவர்கள்.

ஒரு கை லோலா ஹஸ்தம், கல்படிமங்கள் நேர்த்தியான கலை நுட்பம் உடையவை. வெளிப்பிரகாரம் தென்மேற்கு சாஸ்தாவின் கோயில். இதில் சாஸ்தா செண்டுடன் இருக்கிறார். வடமேற்கில் நாகர் சிற்பங்கள் பீடத்தில் உள்ளன. அர்த்தமண்டபத்தில் வடக்கு ஓரத்தில் கிழக்கு நோக்கி விழாப்படிமங்கள் உள்ளன.

விஷ்ணு சங்கு சக்ர தியால் அபய வரத ஹஸ்தத்துடன் உள்ளார். இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவியர் உள்ளனர். பாலகிருஷ்ணன் அருகில் உள்ளார். இவை செப்புப்படிமங்கள் ஆகும். கோயிலில் கல்வெட்டுகள் இல்லை. கோயில் அமைப்பின் படி கருவறைப்பகுதி கி.பி. 12-13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம். பிரகார பகுதிகளும் முகமண்டபமும் 15ம் நூற்றாண்டை சார்ந்தவை.

முகமண்டப தூண்களில் ஆதிசேஷர் மேல் அனந்தசயனம் கொண்ட திருமால், கருடன், முனிவர்கள், திருவிக்கிரமன், வாமன அவதாரம், ஜெயத்ரதனை வதம் செய்யும் கிருஷ்ணன் ஆகிய சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் மேற்கு பக்க சுவரில் விதானத்தை ஒட்டிய பகுதியில் திருமால் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் இருக்கிறார். இருபுறமும் அனுமனும், கருடனும் உள்ளனர்.

சிற்பங்கள் மூலவரைப் போன்றவை. இதே மண்டபம் தென்புற தூண்களில் வாலியும், சுக்கிரீவனும் சண்டை செய்வதும் அருகே ராமன் நிற்பதுமான காட்சி சிற்பங்கள் உள்ளன. அனுமன் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கும் காட்சி, விஷ்ணு சிற்பங்கள் உள்ளன. கோயில் குறித்த வரலாற்று கதை உண்டு. திருவிதாங்கூரில் முதல் அரசரான மார்த்தாண்டவர்மா (1728-1756) 8 வீட்டு பிள்ளைமார்க்கு அஞ்சி காட்டில் அஞ்ஞானவாசம் செய்தபோது கோயிலில் மறைந்திருந்தார் என்ற ஒரு செய்தி இன்றும் வழங்குகிறது.

Tags : Vishnu Sridevi ,Perumal ,Boodevi ,
× RELATED திருவாரூர் அருகே பக்தவத்சல பெருமாள்...