தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் திருச்சுற்றின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள சுப்ரமணியர் திருக்கோயிலின் வடப்புறச்சுவர் சன்னலின் கீழ் அமைந்துள்ள நுண்ணிய பேரழகு குறுஞ்சிற்பம்.!கைகளில் ஆயுதம் தாங்கிய எண்கரத்தோளாய் போர் புரியும் நுணுக்கமான குறுஞ்சிற்பம்.முன்னிரு கைகள் கத்தியும் சதுர வடிவ கேடயமும் தாங்கியிருக்க பின்கைகள் சங்கு சக்கரம் கதை பாசக்கயிறு என ஏந்தியிருக்கின்றன. பின்வலக்கை அபயம் காட்ட பின் இடக்கை வரத முத்திரை காட்டுகிறது.
அன்னையின் முன்னோக்கிய சாய்விலும் வலக்கால் வீசி அகன்றிருக்கும் தோரணையிலும் ஆடைத்தொங்கல்கள் எதிர்புறமாக பறந்து கொண்டிருப்பதிலும் போரின் உக்கிரத்தையும் அன்னையின் வேகத்தையும் உணர முடிகிறது.கொம்புகள் துருத்தித் தெரியும் வண்ணம் மகுடமணிந்த மகிஷாசுரன் வீழ்ந்துகிடக்க தேவியின் வலதுகால் அவன் முதுகின்மீது அழுத்தப் பதிந்துள்ளது.இருகால்களுக்கிடையில் துர்க்கையின் வாகனமாம் சிம்மம் சுழலும் வாலுடன் தம்முன்னங்கால்களால் மகிஷன் மீது பாய்கிறது!