ஆற்றுகால், கேரளா
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் பொங்கல் திருவிழா பிரசித்தி பெற்றது. இக்கோயிலானது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் பெண்களின்சபரிமலை என போற்றப்படுகிறது.இக்கோயிலில் மூலவராக இருப்பது கண்ணகி ஆகும். கண்ணகி கோவலனின் கொலைக்கு மதுரையில் நீதி கேட்டபின் இங்கே ஆற்றுக்காலில் சிறுமியாய் அவதரித்து ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த பெரியவரிடம் ஆற்றைக் கடக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறாள். பெரியவரோ, சிறுமி தனியாய் இருப்பதை அறிந்து அன்போடு தன் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார். வீட்டிற்குச் சென்றதும் மாயமாய் மறைந்த சிறுமி பின்னர் பெரியவரின் கனவில் வந்து தனக்கு கோயில் கட்டுமாறு சொல்கிறாள். அதனால் கட்டப்பட்டதே இக்கோயில் என்பது தலவரலாறு ஆகும்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலின் முக்கிய நிகழ்வும் இத்திருவிழாவே ஆகும். இப்பொங்கல் விழாவில் சுமார் பத்து லட்சம் பெண்கள் கலந்து கொள்வர்.இதுபோல மண்டல விரதம், விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, சிவராத்திரி, கார்த்திகை தீபம், ஆயில்ய பூஜை, ஐஸ்வர்ய பூஜை, நிரையும் புத்தரிசியும் (இது வயலில் அறுவடைக்கு முன்னர், கொஞ்சம் நெற்கதிர்களை அறுத்து வந்து சாமிக்குப் படையலிடுவது) அகண்ட நாம ஜபம் போன்ற திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.