×

வனத்துறை அனுமதி கொடுக்காததால் வருசநாடு-வாலிப்பாறை சாலை அரைகுறை

*பணிகளை முழுமையாக முடிக்க மக்கள் கோரிக்கைவருசநாடு : வருசநாடு-வாலிப்பாறை தார்ச்சாலை பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிலான தார்ச்சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார்சாலை அமைக்க அரசு உத்தரவிட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் பின்னர் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது சாலையில் குறிப்பிட்ட பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறி தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு வருசநாடு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது. மீதமுள்ள 5 கிலோமீட்டர் தொலைவிலான பகுதியில் சாலை அமைக்க வனத்துறையினர் தற்போது வரை அனுமதி வழங்கவில்லை. இதனால் அந்த பகுதியில் மட்டும் தார்ச்சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக காணப்படுகிறது. இந்த பகுதியில் மட்டும் நாள்தோறும் பைக், ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகன விபத்துகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த விபத்துகளில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.அதேபோல சேதமடைந்த சாலையால் விவசாய விளைபொருட்களை தேனி, சின்னமனூர், கம்பம், ஆண்டிபட்டி உள்ளிட்ட சந்தைகளுக்கு உரிய நேரத்திற்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருசநாடு-வாலிப்பாறை இடையே முழுமையாக தார்ச் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமூக ஆர்வலர் வேல்முருகன் கூறுகையில், வருசநாடு-வாலிப்பாறை இடையிலான சாலைகள் மூன்று தலைமுறையாக நடைமுறையிலிருந்தது. தற்போது தார்ச்சாலை பணியை வனத்துறை தாமதிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே விரைவில் தார் சாலையை அமைக்க தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்….

The post வனத்துறை அனுமதி கொடுக்காததால் வருசநாடு-வாலிப்பாறை சாலை அரைகுறை appeared first on Dinakaran.

Tags : Varusanadu-Valipparai ,Varusanadu ,Valiparai ,Varusanadu-Valiparai ,Dinakaran ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்