பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கொளத்தூர் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள பாழடைந்த சீமை ஓடு கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றது. அந்த மையத்தில் 15 குழந்தைகள் தங்கி கற்றல் பயிற்சி பெறுகின்றனர். அங்கன்வாடி மையத்தின் ஆசிரியராக பணியாற்றி வரும் கஜலட்சுமி என்பவர் கடந்த 5 நாட்களாக பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் அமர்ந்திருந்தபோது வேலாயுதம் என்பவரின் இரண்டரை வயது ஆண் குழந்தை குஷித் கல்யாண் என்பவர் திடீரென்று விழுந்ததில் அவர் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனைப் பார்த்த பெற்றோர் பதறி அடித்துக் கொண்டு குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிசசை அளித்தனர். குழந்தைகளை பராமரிக்க ஆசிரியை இல்லாததால் ஆத்திரமடைந்த குழந்தைகளின் பெற்றோர் அங்கன்வாடி மையத்திற்கு விரைந்து வந்து அவர்களது குழந்தைகளை அழைத்துச் சென்றனர். பல ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி பாதுகாப்பற்ற முறையில் உள்ள கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றும், மையத்திற்கு தேவையான விளையாட்டு பொருட்கள், கல்வி உபகரணங்கள் குடிநீர், கழிப்பிடம் குழந்தைகள் அமர்ந்து காலை சத்துணவு சாப்பிட போதுமான வசதிகள் இல்லை என்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளராக பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு முழு நேர அலுவலர் நியமிக்கப்படாததால், பொறுப்பு ஒருங்கிணைப்பாளர் மட்டுமே செயல்படுவதால் அங்கன்வாடி மையங்களில் பராமரிப்பு பணிகள் மற்றும் ஆய்வு மேற்கொள்ளாததால் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் உடனடியாக ஒன்றியத்தில் உள்ள 109 அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டு கட்டிட வசதி ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பி குழந்தைகளுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்….
The post பள்ளிப்பட்டு அருகே அங்கன்வாடி மையத்தில் குழந்தை தவறி விழுந்து காயம்: ஆசிரியர் இல்லாததால் பெற்றோர் அச்சம் appeared first on Dinakaran.