×

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பணிகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் ஆலத்தூர், அரியபெருமானூர், அகரகோட்டாலம் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை கொண்டாடும் விதமாகவும் நினைவூட்டும் பொருட்டும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுத்திடும் வகையில் ரூ.5.67 லட்சம் மதிப்பீட்டில் நீர்வழி ஓடை புறம்போக்கு நிலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் புதிய குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆட்சியர் ஆய்வு செய்து, குளக்கரையின் அருகே புதிய மரக்கன்றுகளை நட்டார். அதனை தொடர்ந்து அரியபெருமானூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சங்கன் பாண்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு பணியாளர்களின் வருகை பதிவேடு, பணி பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது பணியாளர்கள் பணிக்கே வராமல் பணிக்கு வந்ததாக வருகை பதிவேட்டில் பதிவேற்றம் செய்வதும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட பணிகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பணிதள பொறுப்பாளர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கும் ஆட்சியர் எச்சரித்து அறிவுறுத்தினார்.இதுபோன்று அகரகோட்டாலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையையும், ரூ.9.97 லட்சம் மதிப்பீட்டில் தோண்டப்பட்டு வரும் ஊராட்சி பொதுக்கிணறு பணியையும் ஆட்சியர் ஆய்வு செய்து தடுப்பணையில் அதிகளவு மழைநீர் சேமித்திட கரைகளை அகலப்படுத்தியும், தரமாக மேற்கொள்ளவும், குடிநீர் கிணறு பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய சேர்மன் அலமேலுஆறுமுகம், கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் மற்றும் உதவி பொறியாளர், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்….

The post கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பணிகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kallakkurchi district ,Kallakkuruchi ,Kallakkuruchi Currutshi Union ,Alathur ,Ariyapuramanur ,Agarakotalam ,Kolakkuruchi District ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி அருகே மாமந்தூர்...