×

மகா லட்சுமிக்காக கௌரி தாண்டவம் ஆடிய மகாதேவன்

திருத்தளி, திருப்பத்தூர், சிவகங்கை

ஒரு கோயிலின் பெயரையே தமது திருப்பெயராக ஈசன் ஏற்றுக் கொண்ட பெருமை கொண்டது திருத்தளி. கயிலாயத்தில் ஈசன் தேவியுடன் தனிமையில் இருந்தார். அப்போது விளையாட்டாக அம்பிகையின் கரியநிறத்தை சுட்டிக் காட்டி ‘காளி’ என்று விமர்சித்தார் ஈசன். அதனால் அன்னை தனது கருநிறத்தை நீக்கி, வெண்ணிறம் பெற்றாள். தேவியின் அந்த எழில் வடிவமே கௌரி என்னும் பெயர் பெற்றது. ஒரு பௌர்ணமி நன்நாளில் அந்தி வேளையில் கௌரி ஈசனை நோக்கி ரம்யமான இந்தச் சூழலில் தாங்கள் திரிபுர சம்ஹாரத்தின்போது ஆடிய தாண்டவத்தை எனக்கு ஆடிக் காட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாள். அதற்கு ஈசன், தான் பூலோகத்தில் திருப்பத்தூரில் எழுந்தருளுவதாகவும், அங்கே திரிபுரசம்ஹார தாண்டவத்தை ஆடிக் காட்டுவதாகவும் தெரிவித்தார். மனம் மகிழ்ந்த கௌரி, நந்திதேவருடன் திருப்பத்தூர் வந்தடைந்தாள்.  இத்தலத்தில் நந்தி மத்தளம் வாசிக்க, தேவி மனம் மகிழுமாறு ஈசன் திரிபுரசம்ஹாரத் தாண்டவத்தை ஆடிக் காட்டினார். கௌரி மனம் மகிழ்ந்ததால் இத்தாண்டவம் கௌரி தாண்டவமாயிற்று.

அதே சமயம் வைகுண்டத்தில் பாம்பணை மேல் பள்ளி கொண்ட பரந்தாமன், மகாலட்சுமியிடம் ‘கௌரியின் விருப்பத்தை நிறைவேற்ற ஈசன் கௌரி தாண்டவம் ஆடிய அழகை நான் மானசீகமாக தரிசித்தேன். உலகை உய்விக்கும் உன்னதத் தாண்டவம் அது. அத்தாண்டவத்தை தரிசித்த கௌரி பேறு பெற்றவள்’ என்று கூறினார். அதற்கு திருமகள், ‘‘பரந்தாமா! அந்த தாண்டவத்தை நானும் தரிசிக்க ஆவலாய் உள்ளேன்.’’ என்றாள். ‘தேவி, நீ திருப்பத்தூர் திருத்தலம் சென்று ஐயனை வேண்டித் தவம் புரிந்தால், நீயும் அந்த தாண்டவத்தை தரிசிக்கும் பாக்யம் பெறுவாய்,’ என்றார் திருமால்.
அந்த அறிவுரையின்படி திருமகள், திருப்பத்தூர் வந்தடைந்தாள். தளி தீர்த்தத்தின் தென்கரையில் கௌரீசனை வழிபட்டாள் லட்சுமி. அவளுடைய பக்திப்பூர்வமான வழிபாட்டில் மனம் மகிழ்ந்த ஈசன், திருமகளுக்கும் கௌரி தாண்டவம் ஆடி அருளினார்.

புராதனச் சிறப்புக்களும் தெய்வ சாந்நித்யமும்  திகழும் திருத்தளியில் அருளாடல் புரிகிறார் ஐயன் திருத்தளிநாதர். கோயில் ராஜகோபுரம் எழிலுடன் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. வெளிப் பிராகாரத்திலேயே வடகிழக்கு மூலையில் அன்னை சிவகாமசுந்தரி அம்மன் கிழக்கு நோக்கி தனி சந்நதியில் வீற்றிருக்கிறாள். தெற்கு பகுதியில் வள்ளி-தேவயானை சமேத முருகன், ஈசனின் கௌரி தாண்டவத்தைத் தரிசிக்க வடக்கு நோக்கி காட்சி தருவதாக ஐதீகம். வடக்குப் பிராகாரத்தில், அழகிய கருவறை விமானத்துடன் யோக பைரவர்.இந்த ஆலயத்தில் பைரவமூர்த்தி வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இதற்காகவே இந்த ஆலயம் ‘வைரவன் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. கோரைப் பற்கள் இரண்டுடன், முப்புரிநூலும், முத்துமாலையும் அலங்கரிக்க, இடக்கரத்தை தொடையில் வைத்து, வலக்கரத்தில் இடியை ஏந்தி யோக நிஷ்டையில் திருக்காட்சி தருகிறார் பைரவர்.
அவர் ஏன் இடியை ஏந்தியிருக்கிறார்? ஈசனின் ஆலயத்தில் தானும் இடம்பெற விரும்பி பைரவர் தவம் இருந்தார். சிவபெருமான் அவர்முன் தோன்றி, ‘பைரவா! நீ இங்கேயே தங்கி எமது பக்தர்களைக் காப்பாற்றுவாயாக!’ என்று பணித்தருளினார்.

ஒருநாள் பெரிய பூதம் ஒன்று ஒரு பெரிய பாறையை தலையில் சுமந்தபடி ஒரு கையில் இடியைப் பிடித்துக் கொண்டு ஓடி வந்தது. பைரவரின் சந்நதியை நெருங்கியதும் பூதத்தின் தலையில் இருந்த மலை தானே கீழே விழ, அதன் கையிலிருந்த இடி தூக்கி எறியப்பட, அதை பைரவர் தன் வலக்கரத்தால் பிடித்தார். பூதவடிவம், இந்திரன் மகன் ஜெயந்தனாக உரு மாறிற்று. ஒரு முறை வித்யாதரப் பெண் ஒருத்தியை பலவந்தப்படுத்திய ஜெயந்தனை அவள் பூதமாக மாறுமாறு சாபமிட்டு, இத்தல பைரவர்முன் அவன் சாபம் தீரும் என்று விமோசனமும் கூற, அப்படியே நிகழ்ந்தது. அந்த நாள் சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை ஆகும். இந்நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் ஜெயந்தன் திருப்பத்தூர் பைரவர் சந்நதிக்கு வருகை தந்து பைரவரைப் பூஜிக்கும் விழா, ஜெயந்தன் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இடி விழுந்தாற்போன்ற துயரப் பிரச்னைகளையும் இந்த பைரவர் இனிமையாகத் தீர்த்து வைக்கிறார் என்கிறார்கள்.

உட்பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் தெற்கு நோக்கி அமைந்துள்ள நடராஜர் சந்நதிதான் கௌரி தாண்டவம் நிகழ்ந்த சிறப்புக்குரிய சந்நதி. வலக்காலை முயலகன் மீது ஊன்றி, இடக்காலைத் தூக்கி வீசி, பத்து கரங்களுடன் திகழும் பெருமாள், சடைமுடியில்  கங்கையும், பிறைநிலவும் தரித்திருக்கிறார். இடப்புறம் அன்னை வலக்கரத்தில் மலர் தாங்கி, இடக்கரத்தைத் தொங்கவிட்ட நிலையில் ஈசனின் தாண்டவத்தை மகிழ்ச்சியுடன் காண்கிறாள். ஈசனின் வலப்புறம் நந்திதேவர் மத்தளம் இசைக்கிறார். சுதை வண்ணத் திருவுருவமாக ஈசனின் இந்த கௌரி தாண்டவக் கோலம் கண்களையும் மனதையும் ஈர்க்கிறது. மேற்குப்புறம் யோக நரசிம்மரும், வைகுண்ட நாதரும், வடக்கே பிரம்மாவும் வீற்றிருக்கின்றனர். சந்நதியில் சுயம்பு மூர்த்தமாக ஐயன் திருத்தளிநாதரின் தரிசனம் காண்கிறோம். மதுரையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது திருத்தளி. காரைக்குடி ரயில்
நிலையத்திலிருந்தும் செல்லலாம்.

Tags : Mahadevan ,Gauri Thandavam ,Maha Lakshmi ,
× RELATED மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆள்...