×

வானகரத்தில் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம்; பந்தல் அமைக்கும் பணிகள் துவங்கியது

சென்னை: வானகரத்தில் உள்ள கல்யாண மண்டபத்திலேயே வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்த தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்காக பந்தல் அமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. அதிமுக பொதுக்குழு கடந்த 23ம் தேதி சென்னை அடுத்துள்ள வானகரத்தில் உள்ள வாரு கல்யாண மண்டபத்தில் நடந்தது. அப்போது, எடப்பாடி ஆதரவாளர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி ஆதரவாளர்கள் எதிர்ப்பு கோஷம் எழுப்பி அவமானப்படுத்தினர். அவர் மீது பாட்டில், பேப்பர் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து ஓபிஎஸ் பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்தார். அன்று நடந்த கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் உடனடியாக முடிவடைந்தது. மீண்டும் அதிமுக பொதுக்குழு வருகிற 11ம் தேதி நடைபெறும் என்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். ஆனாலும், இந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்த விடாமல் தடுக்க ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் சென்றுள்ளனர். எடப்பாடி ஆதரவாளர்கள் எப்படியும் வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்தி, அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்வதில் உறுதியாக உள்ளனர். மீண்டும் வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த வானகரம் கல்யாண மண்டபத்தில் இடம் தர மறுக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. இதையடுத்து சென்னை அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்) பகுதியில் பொதுக்குழுவை நடத்த எடப்பாடி ஆதரவாளர்கள் இடம் தேடினர். அதன்படி, இசிஆர் பகுதியில் உள்ள விஜிபிக்கு சொந்தமான காலி இடத்தில் பொதுக்குழுவை நடத்த சில நாட்களுக்கு முன் முடிவு செய்து, அங்கு சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது. பின்னர் அந்த பணிகளும் நிறுத்தப்பட்டது. இதற்கு, கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க யோசித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், மீண்டும் சென்னை அடுத்த வாகனரத்தில் உள்ள ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்திலேயே 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அங்கு நேற்று பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியது. மேலும், 50க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு கல்யாண மண்டபத்தை சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற தொடங்கி உள்ளது. நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என்றால், திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு 11ம் தேதி வானகரத்தில் நடைபெறுவது தற்போது உறுதியாகியுள்ளது….

The post வானகரத்தில் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம்; பந்தல் அமைக்கும் பணிகள் துவங்கியது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Vanagaram ,Chennai ,AIADMK General Committee ,Kalyana Mandapam ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்