திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு, 50 கிலோ தயிர் சாதம் தயாரிக்கப்பட்டு அன்னக்கொடை உற்சவம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மாசி மகத்தை முன்னிட்டு நேற்று அன்னக்கொடை உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி, நேற்று காலை ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜை, திருமஞ்சன நிகழ்ச்சி, தீபாராதனை நடைபெற்றது. பகல் 2 மணி அளவில் அன்னக்கொடை உற்சவம் தொடங்கியது.
இதற்காக 50 கிலோ தயிர் சாதம் தயாரிக்கப்பட்டு, ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு படைக்கப்பட்டது. பூஜை நிறைவடைந்ததும் தயிர் சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னக்கொடை உற்சவத்தை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.