×

கோவளம் அருகே பயங்கரம் டாக்டரின் பண்ணை வீட்டில் காவலாளி அடித்துக்கொலை: போலீசார் தீவிர விசாரணை

சென்னை: கோவளம் அருகே சென்னையை சேர்ந்த பிரபல டாக்டரின் பண்ணை வீட்டில் சுத்தியலால் அடித்து காவலாளி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. கொள்ளை முயற்சியில் அவரை அடித்து மர்ம ஆசாமிகள் கொலை செய்தார்களா என போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பிரபல டாக்டர் ஒருவருக்கு சொந்தமான பண்ணை வீடு, கோவளம் அடுத்த செம்மஞ்சேரி பகுதியில் உள்ளது. இங்கு, உரிமையாளரான டாக்டர் எப்போதாவதுதான் ஒருமுறைதான் வந்து செல்வாராம். செம்மஞ்சேரி மீனவர் குப்பத்தை சேர்ந்த தேசிங்கு (65) என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக பண்ணை வீட்டின் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், அந்த வீட்டிலேயே தங்கியிருந்தார். வாரம் ஒருமுறை தனது வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு மனைவி, மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் வீட்டுக்கு வந்து விட்டு 13ம் தேதி டாக்டரின் பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார் தேசிங்கு. அதற்கு பிறகு அவரை பற்றிய எந்த தகவலும் இல்லை. குடும்பத்தினர் போன் செய்துள்ளனர். போனை அவர் எடுக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் செம்மஞ்சேரியில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு உடல் அழுகிய நிலையில் ரத்த வெள்ளத்தில் தேசிங்கு இறந்து கிடந்தார். அவரது தலையில் சுத்தியலால் சரமாரி தாக்கிய காயங்கள் இருந்தன.  உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேசிங்கின் மகன் மேகவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை முயற்சியில் காவலாளி தேசிங்கு கொலை செய்யப்பட்டாரா அல்லது மதுபோதை தகராறில் அடித்து கொன்றார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டரின் பண்ணை வீட்டு காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் செம்மஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post கோவளம் அருகே பயங்கரம் டாக்டரின் பண்ணை வீட்டில் காவலாளி அடித்துக்கொலை: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Payangaram ,Kovalam ,CHENNAI ,Panigaram ,Dinakaran ,
× RELATED கடலில் குளித்தபோது மனைவி கண்முன்னே...