தண்டையார்பேட்டை: பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை 2வது நாளாக அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை நடைபாதையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் இயங்கி வந்தன. இதனால் அப்பகுதியில் மக்கள் நடைபாதையில் செல்ல முடியாமல் சாலையில் இறங்கி நடந்து செல்வதுடன், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு கடைகளை வரும் 23ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். இல்லையெனில், அன்றைய தினம் தலைமை செயலாளரும், மாநகராட்சி ஆணையரும் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.இந்நிலையில், பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நேற்று முன்தினம் காலை பகுதி செயற்பொறியாளர் லாரன்ஸ் மேற்பார்வையில், உதவி பொறியாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பொக்லைன் இயந்திரங்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து, ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். முன்னதாக, இங்குள்ள 387 நடைபாதை கடைகளுக்கு மாற்று இடம் கொடுக்க டோக்கன் வழங்கப்பட்டது.தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது. இங்கு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பூக்கடை போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், 2வது நாளாக நேற்றும் நடைபாதை கடைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி இந்த பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்….
The post பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் 2வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.