ஈரோடு : ஈரோடு மாவட்டம், நசியனூர் பேரூராட்சி, வார்டு எண் 4ல் உள்ளது புதுவலசு கிராமம். இங்குள்ள குளத்தை பராமரிப்பு செய்யும் பணிக்காக கடந்த அதிமுக ஆட்சியில், 15வது நிதிக்குழு மானியம் 2020-2021ன் கீழ் ரூ. 18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இக்குளத்தை சுற்றி கரையை பலப்படுத்தி, கம்பி வேலி, நடைபாதை அமைத்து, மரங்கள் நட்டு பராமரிப்பு செய்ய ஒப்பந்ததாரரிடம் பணி ஒப்படைக்கப்பட்டது. இதன் பராமரிப்பு பணி கடந்த 12-11-2021ல் தொடங்கி 22-3-2022ல் சுமார் 5 மாதத்துக்குள் முடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பணி முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து தற்போது வரை 3 மாதங்கள் கூட முழுமையாக முடிவடையாத நிலையில் அந்தக் குளத்தின் கரையில் போடப்பட்டுள்ள சிமெண்ட் தளம் பல இடங்களில் உடைந்து, சிதிலமடைந்துள்ளது. நீர் நிலைகளைப் பாதுகாக்க நீதிமன்றமும், தமிழக அரசும் கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், புதுவலசு குளத்தை முறையாகப் பராமரிக்காததால் குளம் முழுவதும் ஆகாயத் தாமரைச் செடிகள் படர்ந்து குளத்தின் நீர் வளத்தை வெகுவாக பாதித்துள்ளது. எனவே, புதுவலசு மற்றும் அதன் சுற்றுவட்டாரப விளை நிலங்களுக்கும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ள இக்குளத்தை, அரசு உத்தரவின் படி முறையாகவும், தரமாகவும் பராமரித்துப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இனிவரும் காலங்களிலாவது ஒப்பந்த பணிகளை முறைகேடின்றி தரமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்….
The post தரமற்ற கட்டுமான பணியால் குளக்கரை சேதம் appeared first on Dinakaran.