தஞ்சை: தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் அமைந்துள்ளது சமுத்திரம் ஏரி. தஞ்சையில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள பழமையான இந்த சமுத்திரம் ஏரி 287 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஏரி மூலம் சுமார் 1,186 ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஏரி நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது. பின்னர் வந்த மராட்டியர்களின் ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்டது. இந்த ஏரி குறித்த ஓவியம் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது. தஞ்சை நகரில் தொடங்கி மாரியம்மன் கோயில் வரை பரந்து விரிந்து இருந்தது. இந்த ஏரிக்கு கல்லணைக் கால்வாயில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மராட்டிய அரச குடும்பத்தினர் இந்த ஏரியில் படகில் பயணம் செய்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுவது உண்டு. இந்த ஏரியில் கடல் போல தண்ணீர் இருந்ததால் சமுத்திரம் ஏரி என்று அழைக்கப்பட்டு வருகிறது. நாளடைவில் இந்த ஏரி சுருங்கிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த ஏரியை சுற்றுலாதலமாக மாற்ற வேண்டும் என்று தஞ்சை பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கல்லணைக்கால்வாய் கோட்ட பொதுப்பணித்துறை சார்பில் இது தொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டது. ரூ.9 கோடியில் இதற்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சமுத்திர ஏரியில் பறவைகள் தங்கி குஞ்சு பொரிக்கும் வகையில் 3 தீவுகள் ஏற்படுத்தப்பட்டு அதில் மரங்கள் நடப்பட்டு பறவைகள் தங்குமிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இதனை சுற்றி பார்க்கும் வகையில் படகு சவாரியும் விடப்பட உள்ளது. பொழுதுபோக்கு மீன்பிடி பயிற்சித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் படகு சவாரி, சிறுவர் பூங்கா, பொழுது போக்கு மீன்பிடி தளம், பறவைகள் வந்து தங்கும் வகையில் 3 தீவுகள், கழிவறை வசதி, குடிநீர், வசதி வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவையும் ஏற்படுத்தப்படுகிறது. 40 வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய பெரிய சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதத்துக்குள் முடிக்கும் வகையில் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஆழப்படுத்தி கரைகள் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தண்ணீர் வந்துவிடும் என்பதால் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெறாது. ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தும் பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது….
The post தஞ்சை அருகே ரூ9 கோடியில் சுற்றுலா தலமாகும் சமுத்திரம் ஏரி: பூங்கா, படகு சவாரி, மீன்பிடித்தளம் அமைக்க முடிவு appeared first on Dinakaran.