×

விரைவில் பள்ளி திறப்பால் வகுப்பறைகளை சீரமைத்து வர்ணம் பூசும் பணி தீவிரம்-முன்னோடியாக விளங்கிய புரவிபாளையம் பள்ளி

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் வால்பாறை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, நகராட்சி பள்ளி, சுயநிதி பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த மே மாதம் 13ம் தேதியுடன், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேர்வுகள் நிறைவடைந்தது. இதைதொடர்ந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையில், ஒருமாத  கோடை விடுமுறைக்கு பிறகு, வரும் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ளது.  அரசு பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக, அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரம் மட்டுமின்றி, வகுப்பறைகளை சீர்படுத்தி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அரசு பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளை சீர்படுத்தியும், வண்ணம் தீட்டியும் புதுப்பொலிவாக்கும் பணியில் அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதில், இன்னும் சில பள்ளிகளில் அப்பணி மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், பல பள்ளிகளில் அந்தந்த பள்ளி நிர்வாகத்தினரின் ஏற்பாட்டிலே ஆர்வமுடன், வர்ணம் பூசியும், சுகாதாரம் மேம்படுத்தும் பணியிலும் ஈடுபடுகின்றனர்.இதன் ஒரு பள்ளியாக, புரவிபாளையத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியானது, தற்போது பல்வேறு வண்ணத்தால் ஜொலிக்கிறது. ஒவ்வொரு பிரிவு வகுப்புகளுக்கும் வெவ்வேறு வண்ணங்கள் தீட்டி, பார்ப்போரை வியக்கும் வண்ணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஆசிரியர்களின் பங்களிப்பும் உள்ளது என்பது சிறப்பம்சமாக அடங்கியுள்ளது.இப்பள்ளியின் தலைமை ஆசிரிரும், கல்வி மாவட்ட அலுவலருமான (பொறுப்பு) வெங்கடேஷ்வரன் கூறியதாவது: தமிழக அரசு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளையும் மேம்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறது. இது, மாணவர்களின் பெற்றோருக்கு பெரும் ஊக்கமாக உள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட சில  அரசு பள்ளிகளில், அந்தந்த பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்களிப்புடன் புரனமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதிலும் சில பள்ளிகளில், பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூய்மைப்படுத்தி, வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசப்படுகிறது. இதில், பல ஆண்டுகளுக்கு பிறகு, புரவிபாளையம் அரசு மேல்நிலை பள்ளி புனரமைத்து வர்ணம் பூசப்பட்டு, பிற பள்ளிகளுக்கு முன்மாதியான பள்ளியாக விளங்குகிறது. இதுபோன்று ஒவ்வொரு பள்ளியும் செயல்படும்போது, மாணவர்களின் பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வருங்காலங்களில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் செயல்படுவதுடன், மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

The post விரைவில் பள்ளி திறப்பால் வகுப்பறைகளை சீரமைத்து வர்ணம் பூசும் பணி தீவிரம்-முன்னோடியாக விளங்கிய புரவிபாளையம் பள்ளி appeared first on Dinakaran.

Tags : Puravipalayam School ,Pollachi ,School ,Pollachi Education District ,Animalai ,Valbara Taluka ,Education District ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...