×

தமிழகத்தில் பாஜ வளர்வது அதிமுகவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: அதிமுக கூட்டத்தில் பொன்னையன் கட்சியினருக்கு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரட்டை தலைமையில் செயல்பட்டு வருகிறது. யாருக்கு செல்வாக்கு என்பதில் ஓபிஎஸ், இ பிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையே முட்டல் மோதல் இருந்து வருகிறது. வெளியில் ஒற்றுமையாக இருப்பது போன்று காட்டிக் கொண்டாலும், இதரப்பு ஆதரவாளர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் இருந்து வருகிறது. இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அதிமுகவுக்குள் நுழைந்து விட வேண்டும் என்று சசிகலாவும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.இப்படி கோஷ்டி பூசல்களால் அதிமுக தனது பலத்தை இழந்து வருவதை பயன்படுத்தி பாஜக தாங்கள் தான் செல்வாக்கு மிக்க கட்சி என்பதை போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. கூட்டணியில் பாஜக இருந்தாலும் அவர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அதிமுக தரப்பில் இருந்து எப்போதும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்ற ஆதங்கம் அதிமுகவினர் மத்தியில் இருந்து வருகிறது.அதாவது அதிமுக செய்ய வேண்டிய வேலையை பாஜக செய்கிறதே என்கிற குமுறல்  அதிமுகவிலேயே கேட்க முடிகிறது. அதிமுக தலைவர்கள் சம்பிரதாயத்துக்கான  அறிக்கைகளை வெளியிடுவதுடன் நின்றுவிடுகிறார்கள் என்கிற ஆதங்கமும்  அக்கட்சியில் இருந்து வருகிறது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு தங்களது ஆதரவாளர்களை தக்க  வைப்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் அதிமுகவினர் மத்தியில் இருந்து வருகிறது.இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக ஜெயலலிதா பேரவை மாவட்ட  செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மூத்த  நிர்வாகிகள் தம்பிதுரை, பொன்னையன், வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள்  ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட  செயலாளர்கள், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் பலர்  கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள்  அமைச்சருமான பொன்னையன் கலந்து கொண்டு,  தமிழ்நாட்டில் பாஜகவின்  வளர்ச்சியால் அதிமுக எதிர்கொள்ளப்போகும் சவால்களை பற்றி விளக்கி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பொன்னையன் பேசியதாவது:  தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. மாநில  விவகாரங்களில் பாஜக இரட்டை நிலைபாட்டை எடுக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை  நிறைவேற்ற வேண்டாம், கர்நாடகாவுக்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என  அம்மாநில பாஜக கூறுகிறது. ஆனால், தமிழ்நாடு பாஜக உச்சநீதிமன்ற தீர்ப்பின்  அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என்கிறது. அதிமுக பின்னுக்கு தள்ளப்படும் என்ற  பிரச்சாரத்தை மறைமுகமாக பாஜக செய்து வருகிறது. நாம் அனைவரும்  எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் செயல்பட வேண்டும். காவிரி, பாலாறு,  முல்லை பெரியாறு விவகாரங்களில் தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜக குரல்  எழுப்புவது கிடையாது. மக்கள் மத்தியில் இதை நாம் அம்பலப்படுத்த வேண்டும்.  அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி இதை செய்திட வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக வளர்வது  அதிமுகவுக்கு ஆபத்து, பாஜகவின் இரட்டை நிலைபாட்டை மக்களுக்கு  அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி அம்பலப்படுத்த வேண்டும். ஏனென்றால், தமிழ்நாட்டில் அதிமுகவின் இடத்தில் பாஜக இருப்பதாக நம்ப  வைக்கப்பட்டு வருகிறது. இப்படியான முயற்சி அதிமுகவின் எதிர்காலத்துக்கு  நல்லது அல்ல. அதிமுகவை அழித்துவிட்டு அந்த இடத்தில் பாஜக உட்கார  நினைக்கிறது. அந்த கட்சி நம்முடைய கூட்டணியில் இருக்கிறது. இதனை பகிரங்கமாக   பொதுவெளியில் பேசக் கூடிய சூழ்நிலை இல்லை. ஆனால் பாஜகவின் உண்மை முகத்தை  சமூக வலைதளங்களில் அதிமுகவினர் அம்பலப்படுத்தி பிரசாரம் செய்ய வேண்டும்.  அதுதான் அதிமுகவின் எதிர்காலத்துக்கும் நல்லது. …

The post தமிழகத்தில் பாஜ வளர்வது அதிமுகவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: அதிமுக கூட்டத்தில் பொன்னையன் கட்சியினருக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,AIADMK ,Ponnaiyan ,CHENNAI ,Former minister ,Jayalalitha ,Dinakaran ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...