×

தனி ஜெட் விமானம், ஓட்டலில் ரூ.1 லட்சம் வாடகை அறை, பவுன்சர்கள், உயர்தர கேரவன்கள்: ஹீரோக்களின் புதுப்புது அலப்பறைகள்

சென்னை: படத்தின் செலவுகளை கூட்டிவிடும் அளவுக்கு ஹீரோக்களின் அலப்பறைகள் அதிகமாகி வருவதாக திரையுலகை சேர்ந்தவர்கள் புகார் கூறுகின்றனர். ஒரு படத்துக்கு ஆகும் மொத்த செலவில் ஹீரோக்களின் சம்பளம், தனி விமானம், ஸ்டார் ஓட்டலில் 10 அறைகள், உடன் வரும் 10 பேருக்கான சம்பளம் மற்றும் உணவு என அதுவே பல கோடி ஆகிறது என சொல்கிறார் தயாரிப்பாளரும் இயக்குனருமான கே.ராஜன். கொரோனாவுக்கு பிறகு ஹீரோ, ஹீரோக்களுக்கான செலவும் கூடிவிட்டதாக அவர் சொல்கிறார். இது குறித்து அவர் கூறியது:

முன்பெல்லாம் படப்பிடிப்புகள் 90 சதவீதம் ஸ்டுடியோக்களில்தான் நடைபெறும். அப்போது அந்த ஸ்டுடியோவில் ஏசி அறைகள் இருக்கும். ஹீரோவுக்காக ஒரு அறை ஒதுக்கப்படும். இப்போதும் 70 சதவீதம் படப்பிடிப்புகள் ஸ்டுடியோக்களில்தான் நடக்கிறது. அங்கு ஏசி அறைகள் இருந்தாலும் அது எல்லாம் வேண்டாம், எனக்கு கேரவன்தான் வேண்டும் என ஹீரோக்கள் கேட்கிறார்கள். அதுவும் ஒரு நாளைக்கு சில ஆயிரங்கள் செலவாகும் கேரவன்களை அவர்கள் வேண்டாம் என்கிறார்கள். ரூ.80 ஆயிரம் முதல் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும் கேரவன்களைத்தான் கேட்கிறார்கள். முன்னணி நடிகர்கள் மட்டுமல்ல, இரண்டாம் தர நடிகர்கள் கூட இப்படித்தான் இருக்கிறார்கள். பவுன்சர்கள் என்ற புதிய கலாசாரத்தை ஹீரோக்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.3 ஆயிரம் சம்பளம். அதுபோல் 8 பேரை உடன் வைத்துக்கொள்கிறார்கள். சம்பளம் மட்டுமல்ல, அவர்களுக்கு உணவு, இடம் எல்லாம் தயாரிப்பாளர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் ஒன்று அல்லது இரண்டு உதவியாளர்கள் மட்டும்தான் ஹீரோக்களுடனும் ஹீரோயின்களுடனும் இருப்பார்கள். இப்போது, ஃபிட்னஸ் பயிற்சியாளர், நியூட்ரீஷியன், சோஷியல் மீடியா பொறுப்பாளர் என யார் யாரோ உடன் வருகிறார்கள். அவர்களுக்கு தங்களைப்போலவே ஸ்டார் ஓட்டல்களில் அறைகள் வேண்டும் என ஹீரோக்கள் கேட்கிறார்கள். அதுவும் ஹீரோ கேட்கும் அறைதான் பெரும் அதிர்ச்சியை தரும்படி அமைகிறது.

பாலிவுட்டில் ஒரு ஹீரோ, சமீபத்தில் ஸ்டார் ஓட்டலில் ஒரு அறையை கேட்டிருக்கிறார். அதன் ஒரு நாள் வாடகை மட்டும் ரூ.1.10 லட்சம். தயாரிப்பாளர் அவருக்காக ஒதுக்கிய அறையின் விலை ரூ.19 ஆயிரம்தான். ஹீரோ சொன்ன விலையை கேட்டு அந்த தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். அதற்கு அந்த ஹீரோ சொன்ன காரணம்தான், வேடிக்கையானது. குறிப்பிட்ட அறையின் திரைச்சீலைகளை அதிகாலையில் திறந்து பார்த்தால், அங்கு மயில்கள் கூடியிருக்கும் கண்கொள்ளா காட்சி தெரிகிறது. காலையில் நான் மயில்களை பார்த்துச் சென்றால் அன்றைய தினம் முழுக்க எனக்கு சாதகமாக இருக்கும் என சொல்லியிருக்கிறார். இது பாலிவுட்டில் மட்டும் நடக்கவில்லை.

இங்கும் அந்த நிலைதான். கொரோனாவுக்கு பிறகுதான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், இப்போது சினிமா மீண்டு வருகிறது. அதை ஹீரோ, ஹீரோயின்கள் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஒரு 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வெளியூர்கள் அல்லது வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு சென்றால் விமானத்தில் பிசினஸ் கிளாஸ் வேண்டும் என்றுதான் ஹீரோக்கள் கேட்டு வந்தனர். இப்போது எங்களுக்கு தனி விமானம் வேண்டும் என கேட்கிறார்கள். இதற்கு ஒரு நாள் செலவு மட்டுமே ரூ.25 லட்சம். இதுபோல் செயற்கை செலவுகளை ஏற்படுத்துவதே ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களின் வேலையாக இருக்கிறது.

இதையெல்லாம் அனுமதிப்பது தயாரிப்பாளர்கள்தான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஹீரோ, ஹீரோயின்களுக்கு இந்த விஷயத்தில் ஆதரவாக இருப்பது இயக்குனர்கள். சில இயக்குனர்கள் கூட தங்களுக்கு பவுன்சர்கள் வைத்துக்கொண்டு அந்த செலவுகளையும் தயாரிப்பாளர்கள் தலையில் கட்டுகிறார்கள். தயாரிப்பாளர்கள், தங்களுக்கு லாபம் கிடைக்கும் என்ற ஒரே எண்ணத்தில்தான் ஹீரோ, ஹீரோயின்களுக்கு இதுபோல் செலவிடுகிறார்கள். ஆனால். லாபம் பார்ப்பது வெறும் 10 சதவீதம் பேர்தான். 90 சதவீதம் பேர் ஒரு படத்துடன் காணாமல் போகும் தயாரிப்பாளர்களாகவே இருக்கிறார்கள். இவ்வாறு கே.ராஜன் கூறினார்.

The post தனி ஜெட் விமானம், ஓட்டலில் ரூ.1 லட்சம் வாடகை அறை, பவுன்சர்கள், உயர்தர கேரவன்கள்: ஹீரோக்களின் புதுப்புது அலப்பறைகள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சமந்தா வெளியிட்ட நிர்வாண போட்டோ: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி