×

கோஷ்டி பூசலால் அதிருப்தியில் இருக்கும் சேலம் விஐபி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பிறந்த நாள் முடிந்த நிலையில் யார் ெடன்ஷனில் இருக்கிறாங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மாங்கனி மாவட்ட மாஜி விவிஐபியின் ஆதரவாளர்கள் மா.செ.,வாக இருக்கும் பெரும்பாலான மாவட்டங்களில் சமீபகாலமாக கோஷ்டி பூசல் வலுத்துக்கிட்டே வருதாம். இதில் லேட்டஸ்டாக அதியமான் கோட்டை மாவட்டம் சேர்ந்திருக்காம். இந்த மாவட்டத்துல பல்லாண்டுகளாக பொறுப்பில் இருக்கும் மாஜி மீது இருந்த வெறுப்பு, வெறும் புகைச்சலாய் மட்டும் இருந்ததாம். அதை எம்ஜிஆர் காலத்து மாஜி எம்எல்ஏ ஒருத்தரு, கொளுந்து விட்டு எரியச்செய்திருக்கிறாராம். பழைய மொரப்பூர் தொகுதியில் ஜெயிச்ச சிங்காரமானவரு, கட்சியில் மாநில அளவிலான போஸ்டிங்கிலும் இருக்காராம். சமீபத்தில் இவரு, ரத்தத்தின் ரத்தங்களுக்கு கட்சி மீதுள்ள ஈர்ப்பு வரவர குறைஞ்சுகிட்டே இருக்கு. இதை மாற்ற மாவட்டத்தை இரண்டா பிரிக்கணும். என்னைப்போல மூத்த நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கணும் என்று கொளுத்திப் போட்டிருக்காராம். இது பொறுப்பில் இருக்கும் மாஜியின் காதுக்கு போனதால் அவரு, செம அப்செட்டில் இருக்காராம். இத்தனை நாளா வாயை திறக்காத மூத்த நிர்வாகி, திடீர்னு இப்படி கோரிக்கை வைக்கிறார் என்றால் அதை சாதாரணமாக நினைக்கக் கூடாது. அவரை தூண்டிவிடுறவங்க யாருன்னு கண்டிப்பா கண்டு பிடிக்கணுமுங்கோ என்று மாஜியை சுடேத்திக் கிட்டு இருக்காங்களாம் அவரது விசுவாசிகள்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘வசூலில் கொழிக்கும் காக்கி அதிகாரி கிலியில் உள்ளாராமே…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சின்ன மாவட்டத்தில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வரும் காக்கி அதிகாரி வேலானவர் ஒருவர் புறவழிச்சாலையில் பணியில் ஈடுபடும் போது அந்த வழியாக செல்லும் 4 வீலர் வாகனங்களை வழிமறித்து ரூ.500 வரை கட்டாய வசூல் வேட்டையில் இறங்கியுள்ளாராம். இதில் சில நேரங்களில் டூ வீலர் வாகன ஓட்டிகளையும் அவர் விட்டு வைப்பதில்லையாம். அந்த அளவுக்கு வசூல் வேட்டையில் அந்த அதிகாரி கொழித்து வருகிறாராம்… இந்த வசூல் வேட்டை விவகாரம் குறித்த தகவல் உயரதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாம். இதனால் விரைவில் காக்கி அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை இருக்கும் என சக காக்கிகளுக்குள் இந்த டாப்பிக் தான் ஓடுகிறதாம். இதனால் சம்பந்தப்பட்ட காக்கி அதிகாரி கிலியில் உள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா‘‘டிரான்ஸ் வாங்க ஆடு வெட்டி பிரார்த்னை செய்த அதிகாரியை பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சி ஆட்சியின்போது, கோவை மாநகராட்சியில், ‘ஞான’மான பெயர் கொண்ட ஒரு எக்ஸ்கியூட்டிவ் இன்ஜினீயர் கடும் தர்பார் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இவர், அதிரடியாக ஈரோடு மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து ஆட்டம் போட்ட 4 இன்ஜினியர்களும் அதிரடியாக மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்குமே ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. இடமாற்றம் செய்யப்பட்டு விட்டதால், அனைவரும் தங்களது பங்களாவை காலி செய்துவிட்டனர். ஆனால், ‘ஞான’மான அந்த அதிகாரி மட்டும் இன்னும் பங்களாவை காலிசெய்ய மறுக்கிறார். இவர், பணிபுரிவது ஈரோடு மாநகராட்சியில். ஆனால், தங்கியிருப்பது கோவை மாநகராட்சி பங்களாவில். இவரது செயல், கோவை மாநகராட்சி உயரதிகாரிகளை கடுப்படைய செய்துள்ளது. ‘உடனடியாக பங்களாவை காலி செய்யாவிட்டால், பங்களாவில் உள்ள பொருட்கள் அதிரடியாக அகற்றப்பட்டு, பங்களா கையகப்படுத்தப்படும்’ என மாநகராட்சி உயரதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனாலும், அந்த ‘ஞான’மான அதிகாரி அசைந்து கொடுக்கவில்லை. இதற்கிடையில், இவர், கோவையை அடுத்த பில்லூர் அணைப்பகுதியில் உள்ள ஒரு கருப்பராயன் கோயிலில் ஆடு வெட்டி, சக அதிகாரிகளுக்கு விருந்து படைத்துள்ளார். அப்போது, சாமீ…, எப்படியாச்சும் கோவைக்கு டிரான்ஸ்பர் வேணும்னு வேண்டிக் கொண்டாராம்.இவருடன், சாமி என்ற பெயர் கொண்ட ஒரு பொறியாளர், ராஜ் என்ற பெயர் கொண்ட இன்னொரு பொறியாளரும் பங்கேற்று, வேண்டுதல் நிறைவேற்றியுள்ளனர். சாமி கண் திறப்பாரா என்பது தெரியவில்லை என்கிறார்கள் சக ஊழியர்கள்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘நாகர்கோவில் மேட்டர் என்ன…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர் ஒருவர் மன்மத ராசா ஆக வலம் வருவதாக அங்கு பணியாற்றும் பெண் அலுவலர்கள் புகார் கடிதம் வாசிக்க தொடங்கியுள்ளனர். இரவு நேரங்களில் பெண் பணியாளர்களை செல்போனில் அழைத்து பேசுவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது, மறுநாள் காலையில் வரும்போது அந்த பேச்சுக்களின் ஆடியோ பதிவை சம்பந்தப்பட்டவர்களுக்கு போட்டு காண்பித்து பேசுவது, எப்போதும் பெண் பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைத்து பேசுவது, என்னை அட்ஜெஸ்ட் செய்தால் உங்களுக்கு சலுகைகள் கிடைக்கும் என்று வெளிப்படையாக கூறுவது என்று அவரது செயல்பாடுகள் எல்லை மீறி போக பெண் பணியாளர்கள் சிலர் சிஇஓ கவனத்திற்கு விஷயத்தை கொண்டு சென்றுள்ளார்கள். இருப்பினும் நடவடிக்கை எடுக்காததால் அவர்கள் குமுறி வருகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.     …

The post கோஷ்டி பூசலால் அதிருப்தியில் இருக்கும் சேலம் விஐபி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salem ,Koshti Busalal ,Yananda ,Peter ,Mangani District ,Maji ,CM ,Koshti Busal ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை