×

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை : பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது:  மாநிலங்களில் பல்வேறு நிலைகளில் நீதிமன்றங்கள் இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும், அலுவலர்களும் பின்பற்றும் வகையில் நீதித் துறையின் அமைப்பு உள்ளது. மற்ற அம்சங்களில், நீதித்துறையும் நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள கூட்டாட்சி தத்துவத்தின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும். இந்தப் பின்னணியில், உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் நமது நாட்டின் பன்முகத்தன்மையோடு அமைய வேண்டுமென்ற கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் நீதிபதிகள் நியமிக்கப்படும்போது தான், பன்முகத் தன்மையும், ஒட்டுமொத்த சமூகத்தின் கண்ணோட்டங்களும், உணர்வுகளும் பிரதிபலிக்க ஏதுவாக இருக்கும். அந்த வகையில், உச்ச நீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாசார பிரதிநிதித்துவம் அமைய வேண்டுமென்று தான் கருதுகிறேன். எனவே, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் சமூகப் பன்முகத்தன்மையையும், சமூக நீதியையும் பேணும் வகையில், நீதிபதிகளை நியமிப்பதற்கான நடைமுறைக் குறிப்பில் அதற்கேற்ப உரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அடுத்து, நாட்டின் கூட்டாட்சித்தன்மை நீதித்துறையில் பிரதிபலிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளைகளை பல்வேறு மாநிலங்களில் நிறுவ வேண்டும். நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களும் நீதிமன்றத்தை நேரடியாக அணுக வேண்டும் என்ற அடிப்படையில்தான் அரசமைப்புச் சட்டத்தை வகுத்தளித்தவர்கள்   32-வது பிரிவை இயற்றியுள்ளனர். ஆனால், உச்ச நீதிமன்றத்திற்கு அருகில் இருக்கும் மாநிலங்களைச் சார்ந்த குடிமக்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும் நிலை உள்ளது. மேலும், நாடு முழுவதும் பல்வேறு உயர் நீதிமன்றங்கள் இருந்தாலும், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடுகளின் எண்ணிக்கை அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களிலிருந்து அதிகம் என்பதை தரவுகளிலிருந்து அறிய முடிகிறது. அரசியல் நிர்ணய சபையில் இது தொடர்பாக நடைபெற்றுள்ள விவாதங்களும், பாராளுமன்ற நிலைக்குழுக்களின் பரிந்துரைகளும், பல்வேறு சட்ட ஆணையங்களின் அறிக்கைகளும் உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை மாநிலங்களில் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, புதுதில்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளைகளை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் மற்றொரு விஷயமான உயர் நீதிமன்றங்களின் அலுவல் மொழி குறித்து கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய நான்கு உயர் நீதிமன்றங்களில், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை ஆக்குவதற்கு ஏதுவாக, தமிழ் மொழியில் தரமான சட்ட நூல்களை வெளியிடுவதற்கு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. செம்மொழியாகவும், அதே சமயம் நவீன மொழியாகவும் உள்ள தமிழ் மொழியினை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக  பயன்படுத்துவது முற்றிலும் பொருத்தமானதாக இருக்கும். சட்டத்தையும், நீதியையும் சாமானிய மக்களுக்குப் புரியவைப்பது நீதி வழங்கல் அமைப்பின் இன்றியமையாத கடமை. அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாநிலத்தின் அலுவல் மொழியை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக ஆக்குவதில் உள்ள சிரமங்களை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் எளிதில் சரிசெய்திட முடியும்.எனவே, தமிழக அரசின் அலுவல் மொழியான தமிழை, ஆங்கிலத்துடன் சேர்த்து, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளையின் அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி முன்னிலையில் கடந்த மாதம்    23ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில், இந்த 3 கோரிக்கைகளையும் தான் முன்வைத்தேன். இவை எதிர்காலத்தில் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.  இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது….

The post சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை : பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chief Minister ,M.K.Stal ,Chief Justice of Supreme Court ,Chennai ,Narendra Modi ,Chennai High Court ,Chief Justice of ,Supreme Court ,
× RELATED கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது...