×

லாரி மோதி கன்டெய்னர் தீப்பிடித்து எரிந்தது : டிரைவர்கள் தப்பினர்

தா.பேட்டை: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மின்சாதன பொருட்கள் மற்றும் இதரபொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தூத்துக்குடி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த தெய்வேந்திரன் (55) ஓட்டி வந்தார். நேற்று அந்த லாரி திருச்சி மாவட்டம் சிறுகனூர் வந்தது. இதனையடுத்து டிரைவர் தெய்வேந்திரன் லாரியை திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே சாலையோரத்தில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நிறுத்தி இருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து லாரியை இயக்குவதற்கு ஏறி அமர்ந்தபோது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் கன்டெய்னரின் பின்பகுதி தீப்பிடித்து எரிந்தது. டிரைவர் தெய்வேந்திரன் கன்டெய்னர் லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பினார். அதேபோல் மற்றொரு லாரி டிரைவரும் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.தகவலறிந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி (பொ) தலைமையில் வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். விபத்து நடைபெற்ற இடத்தின் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் கன்டெய்னர் லாரியின் பின் பகுதி மற்றும் அதில் இருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்டெய்னர் லாரி மீது மோதி விட்டு தப்பி ஓடிய மற்றொரு லாரி டிரைவரை தேடி வருகின்றனர்….

The post லாரி மோதி கன்டெய்னர் தீப்பிடித்து எரிந்தது : டிரைவர்கள் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Lorry ,T.D. Hood ,Chennai ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED சிறுமியின் காதலை கண்டித்த தாயின்...