நாமக்கல்: ராசிபுரம் அருகே தேர்விற்கு தாமதமானதால் 9ம் வகுப்பு மாணவி பள்ளியின் அருகே பேருந்தை நிறுத்தக்கோரிய நிலையில், பேருந்தை நிறுத்தாமல் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனரை கண்டித்து, ஈஸ்வரமூர்த்தி பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தனியார் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். கடந்த 9-ம் தேதி மதியம் தேர்விற்கு சென்ற மாணவி, அரசு பேருந்தை தவறவிட்டதால், தனியார் பேருந்தில் ஏறி தேர்விற்கு சென்றுள்ளார். அப்போது தேர்விற்கு தாமதம் ஆனதால், பள்ளியின் அருகே பேருந்தை நிறுத்த கூறியுள்ளார். அது டவுன் பஸ் நிறுத்துமிடம், அங்கே நிறுத்த முடியாது என கூறிய நடத்துனர், பேருந்தை நிறுத்தாமல் சென்றனர். இந்நிலையில் பேருந்து மெதுவாக சென்று கொண்டிருந்தபோது, மாணவி திடீரென கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவி, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள், கவனக்குறைவாக செயல்பட்ட ஓட்டுநர், நடத்துனரை கண்டித்து, அந்நிறுவனத்தை சேர்ந்த தனியார் பேருந்து ஒன்றை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களிடம் சமாதானம் பேசினர். இதனையடுத்து, அங்கு வந்த தனியார் பேருந்தின் உரிமையாளர் பொதுமக்களிடம் சமாதானம் பேசினார். பின்னர், காவல்துறை சார்பாக சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர்,நடத்துனர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தனர். …
The post ராசிபுரம் ஓடும் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட மாணவி: தனியார் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் appeared first on Dinakaran.