குளச்சல்: 3வது அணிக்கு இடம் கொடுத்தால் பாஜ மீண்டும் வெற்றி பெற்று விடும் என்று சாதிமறுப்பு திருமண விழாவில் திருமாவளவன் எம்பி பேசினார். கன்னியாகுமாரி மாவட்டம் ரீத்தாபுரத்தில் நடந்த சாதி மறுப்பு திருமண விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி பேசியதாவது: நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்று கொண்டவர் அம்பேத்கர். அவர் ஆயுதம் தாங்கி புரட்சி செய்யவில்லை. அவரது புரட்சி கோடானு கோடி மக்களிடம் மாபெரும் சக்தியாக மாறி உள்ளது. அவர் தொடங்கி வைத்த சமூக புரட்சி விளிம்பு மக்களை வலிமை பெற செய்துள்ளது. அய்யா வைகுண்டர் மேல் சாதி ஆதிக்கத்தை எதிர்த்து உயர்த்தி பிடித்தவர். தோள் துண்டை தலைப்பாகையாக மாற்றினார். சமத்துவ கிணறு அமைத்தார். பார்ப்பனர்கள் தங்களை பாதுகாக்கத்தான் இந்துத்துவாவை கையில் பிடித்துள்ளனர். இந்த நாட்டை மாற்றியமைக்க துடிக்கின்றனர். அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டம் தான் எஸ்சி., எஸ்டி. மக்கள் அதிகாரம் பெற செய்தது. சனாதனத்தின் கட்டமைப்பு அடித்து நொறுக்கப்பட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ் சங்பரிவார்களின் முதல் எதிரி அம்பேத்கர்தான். ஆனால் அதை அவர்கள் வெளிப்படுத்துவது இல்லை. அது ராஜதந்திரம். அவர்களின் திட்டம் அரசியல் அமைப்பு சட்டத்தை நீர்த்து போக செய்வதுதான்.அம்பேத்கர் இறுதிவரை இந்துத்வாவை எதிர்த்தார். இதை மாற்ற முயற்சிக்கின்றனர். நாம் அதை அனுமதிக்க கூடாது. 3வது அணி அமைந்தால் பாஜ மீண்டும் வெற்றிபெற்று விடும். நாம் பாஜவை தனிமைப்படுத்த வேண்டும். இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணம் பன்முகத்தன்மையை அனுமதிக்காததுதான். இப்போது இங்கும் பிரதமர் மோடி ஒரே தேசம், ஒரே ஆட்சி, ஒரே மொழி என முயற்சிக்கிறார். இதிலிருந்து நாட்டை காப்பாற்ற நமக்கு கடமை இருக்கிறது….
The post 3வது அணிக்கு இடம் கொடுத்தால் பாஜ மீண்டும் வெற்றி பெற்று விடும்: திருமாவளவன் எம்பி பேச்சு appeared first on Dinakaran.