காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் சொர்ணவாரி பருவத்திற்கு தேவையான விதை நெல் போதுமான அளவில் இருப்பில் உள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், நவரை பருவத்தில் விளைந்த நெல் கதிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர்.மேலும், கோடை வெயில் தொடங்கும் முன்பே, சொர்ணவாரி பருவத்தில் விவசாயம் செய்ய தயாராகி வருகின்றனர். இதனால் இந்த பருவத்திற்கு தேவையான விதைகளை ஆயத்தம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், காவேரிப்பாக்கம் வேளாண்மை விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான விதைகள் கோ-51 ஆதார நிலை 1,500 கிலோ, ஆடுதுறை 37 விதை 300 கிலோ தற்போது இருப்பில் உள்ளன. ஆகையால், மேற்குறிப்பிட்ட ரகங்கள், விதை கிராம திட்டத்தில் 50 சதவீதம் மானியத்தில் விநியோகம் செய்ய தயாராக உள்ளன. மேலும், கோ-51 ரக விதை நெல் 15 மெட்ரிக் டன் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் காவேரிப்பாக்கம் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் பாணாவரம் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம் தெரிவித்துள்ளார்….
The post சொர்ணவாரி பருவத்திற்கு தேவையான விதை நெல் இருப்பு-வேளாண் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.