×

தங்கக்குதிரை வாகனத்தில், பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்

* 2 ஆண்டுக்கு பின் அனுமதியால் பக்தர்கள் உற்சாகம்* 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பரவசம்மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் தங்கக்குதிரை வாகனத்தில், பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் நேற்று இறங்கினார். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்தனர். மதுரை சித்திரை திருவிழா, கடந்த 5ம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14ம் தேதி திருக்கல்யாணம், 15ம் தேதி தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தன. சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் ைவபவம் நேற்று கோலாகலமாக நடந்தது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோயில் வளாகத்தில் மட்டுமே நடந்த இந்நிகழ்வு இம்முறை சுமார் 10 லட்சம் பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது.முன்னதாக, அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் கடந்த 14ம் தேதி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் ஆகிய இடங்களை கடந்து நேற்று முன்தினம் காலை மூன்றுமாவடி வந்தடைந்தார். இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடந்தது. அழகர் வேடம் தரித்த ஏராளமான பக்தர்கள் கள்ளழகரை எதிர் கொண்டு பாடல்கள் பாடியும், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடிப்பாடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து 450க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளினார். பின்னர் இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு வந்தார். நள்ளிரவு 12 மணியளவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில்  இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அழகருக்கு சூட்டப்பட்டது.நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மேல் அழகர், தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அதிகாலை 3 மணி அளவில் தங்கக்குதிரையில் அமர்ந்தபடி, ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றுக்கு அழகர் புறப்பட்டார். வைகையாற்றில் அழகர் இறங்குவதை காண ஆற்றின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். வைகை ஆற்றின் கரையோரம், ஆற்றுப்பாலம் என திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் தலைகளே தென்பட்டன. வளமையும், செழுமையும் நிலைக்க தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் பச்சைப்பட்டுடுத்தி, வைகையாற்றில் காலை 6.12 மணிக்கு இறங்கினார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் எழுப்பிய “கோவிந்தா… கோவிந்தா…” கோஷம் விண்ணை முட்டியது. பக்தர்கள் சர்க்கரை நிரப்பிய செம்புகளில் தீபம் ஏற்றி கள்ளழகருக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். ஏற்கனவே, அதிகாலை 5.22 மணிக்கு மதுரை தெற்குவாசல் வீரராகவ பெருமாள், வைகை ஆற்றுக்கு வந்து மண்டகப்படியில் இருந்தார். அவர், தங்கக்குதிரையில் வந்த அழகரை வரவேற்று 3 முறை வலம் வந்தார். அழகர் வைகை ஆற்றில் இறங்கியதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர். வைகை ஆற்றில் இறங்கிய அழகர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் அங்கிருந்து காலை 7.55 மணிக்கு புறப்பட்டு ராமராயர் மண்டபம் வந்தார். பகல் 12 மணி அளவில் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் ‘‘தீர்த்தவாரி’’ நடைபெற்றது. இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அழகர் எழுந்தருளினார். இன்று தசாவதாரம்: இன்று காலை 6 மணிக்கு வீரராகவ பெருமாள்  கோயிலில், அழகர் திருமஞ்சனமாகி ஏகாந்த சேவையில் உலா வருகிறார். காலை 9  மணிக்கு சேஷ வாகனத்தில் 11 மணிக்கு தேனூர் மண்டபத்தை அடைகிறார். பிற்பகல் 2  மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்  அளிக்கிறார். மாலை 3.30 மணிக்கு அனுமர் கோயிலுக்கு அழகர் வருகிறார். அங்கு  அங்கப்பிரதட்சணம் நடக்கிறது. இரவு ராமராயர் மண்டபத்திற்கு வருகிறார். அங்கு  11 மணிக்கு திருமஞ்சணமாகி விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.20ம் தேதி இருப்பிடம் சேருகிறார்நாளை அதிகாலை 6 மணிக்கு மோகனாவதாரத்தில் அழகர் வீதி உலா வருகிறார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் ஆனந்தராயர்  பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். 19ம் தேதி அதிகாலை  2.30 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில்  திருமஞ்சனமாகி  பூப்பல்லக்கில் எழுந்தருளுகிறார். அதே திருக்கோலத்தில்  கருப்பணசாமி கோயிலில் இருந்து கள்ளழகர் மலைக்கு புறப்படுகிறார். மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 20ம் தேதி பகல் 12.05  மணிக்கு மேல் 1.30 மணிக்குள் இருப்பிடம் அடைகிறார்….

The post தங்கக்குதிரை வாகனத்தில், பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர் appeared first on Dinakaran.

Tags : Kallazhagar ,Vaigaya ,Paravasammadurai: Madurai Chitrai Festival ,Kallazhakar ,Vaikayaar ,
× RELATED அணையில் தண்ணீர் திறப்பால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு