சேலம்: சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவரது வீடு சீலநாயக்கன்பட்டியில் உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி அதிகாலை, இவரது வீட்டிற்குள் கொடூர கொள்ளை கும்பல் ஒன்று புகுந்தது. வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய்களுக்கு மயக்க பிஸ்கட்டை போட்ட கும்பல், காவலாளி கோபாலை கொலை செய்தது. பின்னர் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், தாளமுத்து நடராஜனை துப்பாக்கியால் அடித்து கொலை செய்தனர். பிறகு வீட்டில் இருந்த சுமார் 200 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், கொள்ளை கும்பல் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், தமிழகத்தில் பைபாஸ் பகுதியில் தனியாக இருக்கும் வீடுகளில், இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தது. விசாரணையில், வடமாநிலத்தை சேர்ந்த ‘பவாரியா’ என்ற கொள்ளை கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் கொள்ளையடிக்கும் இந்த கும்பல், லாரிகளில் ரகசிய அறை அமைத்து பதுங்கி தப்பி செல்வார்கள். இதையடுத்து போலீஸ் அதிகாரி ஜாங்கிட் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் பஞ்சாப், அரியானா, மத்தியபிரதேசத்தில் முகாமிட்டனர். இதில் கொள்ளை கும்பலுக்கும், போலீசுக்கும் இடையே நடந்த மோதலில் கொள்ளையன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். பின்னர் அக்கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்து, தமிழகம் அழைத்து வந்தனர். இந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் கார்த்தி நடித்த தீரன்அதிகாரம் 1 என்ற திரைப்படம் வெளியானது.இக்கும்பலின் தலைவரான அரியானாவை சேர்ந்த ஓம்பிரகாஷ் உள்பட 7 பேரை, போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது தமிழகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் இருக்கிறது. காஞ்சிபுரத்தில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கும்பல் தலைவன் ஓம்பிரகாஷ், அசோக், ராகேஷ்குண்டு, ஜெகதீஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் இருந்த ஓம்பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். சேலம் தாளமுத்து நடராஜன், காவலாளி கோபால் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த ஜலந்தர்சிங், அரியானாவை சேர்ந்த பப்லு, ஓம்பிரகாஷ் மனைவி பீனாதேவி, சாந்தோ ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஜாமீனில் வந்த இவர்கள் தலைமறைவாகி விட்டனர். அதன்பிறகு அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இந்த வழக்கில் சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 4 பேர் தலைமறைவாக இருப்பதால், அவர்கள் மீதான வழக்கை பிரித்து விட்டு, சிறையில் இருக்கும் அசோக், ராகேஷ்குண்டு, ஜெகதீஸ் ஆகியோர் மீது வழக்கை நடத்த திட்டமிடப்பட்டது. இந்த வழக்கு வரும் மே மாதம் 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் கொடுக்கப்படுகிறது. கொலை சம்பவம் நடந்து 20 ஆண்டுகளை தாண்டிவிட்டதால் வழக்கை விரைந்து முடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல்கோடா, வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், தலைமறைவாக இருக்கும் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதே நேரத்தில் அன்னதானப்பட்டி உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் சந்திரகலா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் பஞ்சாப் செல்லவுள்ளனர். இதனால் 20 ஆண்டுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த ‘பவாரியா’ என்ற கொள்ளை கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் கொள்ளையடிக்கும் இந்த கும்பல், லாரிகளில் ரகசிய அறை அமைத்து பதுங்கி தப்பி செல்வார்கள். இதையடுத்து போலீஸ் அதிகாரி ஜாங்கிட் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் பஞ்சாப், அரியானா, மத்தியபிரதேசத்தில் முகாமிட்டனர்….
The post ‘தீரன் அதிகாரம் 1 படத்தின் கதை’ 20 ஆண்டுகளுக்கு முன்பு கொலையான காங். தலைவரின் வழக்கு சூடுபிடிக்கிறது: சிறையில் இருக்கும் 3 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் appeared first on Dinakaran.