×

தமிழகத்தில் தொழில் தொடங்க அமீரக அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: துபாய் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கையும் திறந்து வைத்தார்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாயில்  நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழ்நிலை இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். மாலையில் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கையும் தொடங்கி வைத்தார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாயில் நடைபெறும் உலக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை துவக்கி வைப்பதற்காகவும், தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் நேற்று முன்தினம் முதல்,  28ம் தேதி வரையிலான 5 நாட்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.  அதன் ஒரு கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார அமைச்சர், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே உள்ள விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் பற்றிக் குறிப்பிட்டு, இந்த ஒப்பந்தம் மூலம், தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல வாய்ப்புகளும் சாத்தியக்கூறுகளும் உள்ளதாகவும்,  இதன்மூலம் இரு நாடுகளுக்கிடையே, வர்த்தகமும், வாணிகமும் மேம்பட வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. மேலும், மே மாதத்தில், ஒரு வணிக வர்த்தகக் குழுவுடன் மும்பாய் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களுக்கு வர விருப்பதாகவும், அச்சமயத்தில், தமிழ்நாட்டில் இருந்து ஒரு வணிக வர்த்தகக் குழு அங்கு வந்து அவரை சந்திக்கலாம் என்றும் கூறினார்.   இந்த சந்திப்புகளின் போது, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலையுயர்ந்த கற்கள், மின்வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றி முதலீடுகள் மேற்கொள்வதன் மூலம்  தமிழ்நாட்டிற்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும்  வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  அதைத் தொடர்ந்து, உலக கண்காட்சியில், இந்திய அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு திறந்து வைத்தார். தமிழ்நாடு அரங்கினை திறந்து வைக்க வருகை தந்த முதல்வருக்கு ஐக்கிய அரபு அமீரக வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார். இந்த திறப்பு விழாவின்போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் சகிப்புத்தன்மைத் துறை அமைச்சர்,துபாய் உலக கண்காட்சியின் ஆணையர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் உடனிருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைத்து பேசியதாவது: இந்திய அரங்கில் ‘தமிழ்நாடு வாரத்தைத்’ தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முக்கியமான வளர்ந்து வரும் துறைகளில் எங்கள் மாநிலத்தின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இந்த எக்ஸ்போ கண்காட்சி அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பலவகைப் பொருட்களும் இந்த அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா, மருத்துவம், கலை – பண்பாடு ஆகிய துறைகளோடு, தொழிற்பூங்காக்கள் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் பற்றிய தகவல்கள் ஆகியவையும் நாள் முழுதும் இங்குப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கை யார் பார்வையிட்டாலும், தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் சாதித்துள்ள ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பற்றிய புரிதலை அவர்களுக்கு இந்த அரங்கு வழங்கும்.இந்தியத் தூதரகத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த துபாய் எக்ஸ்போ மற்றும் அதில் இடம்பெற்றுள்ள இந்திய அரங்கின் அமைப்பாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுகள், வாழ்த்துக்கள். இந்த கண்காட்சியில், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டின் சுற்றுலா, மருத்துவம் மற்றும் சுகாதார பாதுகாப்பு, கலை மற்றும் கலாச்சாரம், தொழில் பூங்காக்கள் மற்றும் முக்கிய துறைகள் பற்றிய தகவல்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பப்பட உள்ளன.  இந்த அரங்கினைப் பார்வையிடும் அனைவரும், தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியை நன்கு புரிந்து கொள்ளும் வகையில், இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.  பின்னர், தமிழ்நாடு அரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, பேசியதாவது: உங்கள் அனைவருக்கும் என்னுடைய தமிழ் வணக்கம். துபாயில் நடைபெறக்கூடிய இந்தச் சிறப்புக்குரிய கண்காட்சியில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி. தமிழகத்தினுடைய முதலமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக துபாய்க்கு வருவதில் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன். எப்படி உலகத்தில் இருக்கக்கூடிய எந்தப் பகுதிகளாக இருந்தாலும், எந்த நாடுகளாக இருந்தாலும், அங்கு இருக்கக்கூடிய தமிழர்களுக்கு நம்முடைய தமிழக அரசு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறதோ, பாதுகாப்பாக இருக்கிறதோ, அது தொடர்ந்து நடைபெறும். எனவே ஒன்றிணைந்து வேற்றுமையிலே ஒற்றுமை காணவேண்டிய நிலையில் இந்தச் சிறப்பான கண்காட்சி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் நம்முடைய தமிழ்க் கலாச்சாரத்தை, தமிழ்ப் பண்பாட்டை உணர்த்தக்கூடிய வகையில் இந்த கலை நிகழ்ச்சி நடத்தியிருக்கக்கூடிய அந்தக் கலைஞர்களுக்கெல்லாம் மீண்டும், மீண்டும் என்னுடைய தமிழ் வணக்கத்தைத் தெரிவிக்கிறேன் என்றார்.பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலிப் மற்றும் சவுதி அரேபியா அரங்குகளை பார்வையிட்டார். இந்த நிகழ்வுகளின் போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்ணி, தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.  * 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் துபாய் உலக கண்காட்சியில் தமிழகத்தின் சார்பில் தமிழ்நாடு வாரம் அனுசரிக்கப்படுகிறது.* இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.* தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, கலை,  கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ்வளர்ச்சி, தகவல்  மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற முக்கிய  துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த அரங்கு அமைந்துள்ளது….

The post தமிழகத்தில் தொழில் தொடங்க அமீரக அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: துபாய் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கையும் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : CM ,M.K.Stalin ,UAE ,Tamil Nadu ,Tamil Nadu Pavilion ,Dubai World Expo ,Chennai ,Chief Minister ,Dubai ,
× RELATED கோவை மாக்கினாம்பட்டியில் 8 செ.மீ. மழை பதிவு