நெல்லை : நெல்லை மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது சிறுவர்களுக்கான தடுப்பூசி போடும் பணியை நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் பாளை. தொகுதி எம்எல்ஏ., அப்துல்வகாப் துவக்கி வைத்தார். கொரோனா 4ம் அலை பரவல் தடுப்பதற்காக 12 வயதை தாண்டிய சிறுவர்களுக்கு தடுப்பூசி போட வசதியாக அவர்களுக்கு ‘கோர்போவாக்ஸ்’ என்ற தடுப்பூசிக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.நெல்லை மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் பிற்பகலில் தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன. இதையடுத்து சிறுவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. அந்தந்த பள்ளிகளிலேயே 12 முதல் 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டன. நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாளையங்கோட்டை தொகுதி எம்எல்ஏ., அப்துல்வஹாப், தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். 29வது வார்டு கவுன்சிலர் சுதா மூர்த்தி வரவேற்றார். மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன், பள்ளித் தலைமையாசிரியர் நேபல் ராணி, கவுன்சிலர் டாக்டர் சங்கர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. நெல்லை மாவட்டத்தில் 12-14 வயதுடைய 48,400 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதியில் மொத்தம் 94 பள்ளிகளில் 22,292 மாணவ, மாணவிகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. மாநகரில் அடுத்த ஒரு வாரத்திற்குள் நாள் ஒன்றுக்கு 20 பள்ளிகள் வீதம் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதல் தவணை பெற்று 28 நாட்கள் கழித்து இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இதுபோல் 60 வயதை கடந்த அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும்பணி நேற்று நடந்தது….
The post 12-14 வயது பிரிவினருக்கு `கொரோனா தடுப்பூசி’ போடும் பணி-நெல்லையில் அப்துல்வஹாப் எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.