×

வரகூராம்பட்டியில் பழுதடைந்த பாலம், சாலையை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

திருச்செங்கோடு : திருச்செங்கோடு வரகூராம்பட்டி ஊராட்சியில், திருச்செங்கோடு கூட்டப்பள்ளியிலிருந்து ஆண்டிபாளையம் செல்லும் இணைப்பு தார்சாலை உள்ளது. இதில் சுமார் 50 வருடங்கள் பழமையான சிறுபாலம் உள்ளது. பாலத்தின்கீழ் உள்ள குழாய்கள் வழியாக, திருச்செங்கோடு நகரில் இருந்து வரும் கழிவுநீர் மற்றும் மழைநீர் ஏமப்பள்ளி ஏரிக்கு செல்லும் கால்வாய் வழியாக பாய்ந்தோடும். ஆண்டிபாளையம், விட்டம்பாளையம், கொக்கராயன்பேட்டை வழியாக வரும் கனகரக வாகனங்கள், திருச்செங்கோடு நகருக்குள் செல்லாமல், ஈரோடு பிரதான சாலைக்கு செல்வதற்கு வசதியாக, இந்த சாலை புறவழிச்சாலையாக பயன்பாட்டில் உள்ளது. தற்போது இந்த பாலம் பழுதடைந்து விழுந்து விடும் நிலையில் உள்ளது. பாலத்தின் தென்புற தார்ச்சாலையும் சரிந்து விட்டது. இதனால் லாரி, டிரெய்லர் போன்ற கனரக வாகனங்கள் வரும்போது கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளது. எனவே, பெரும் விபத்து ஏற்படுவதற்குள் நடவடிக்கை எடுத்து தரைமட்டமாக உள்ள பாலத்தை, சற்று உயர்மட்ட பாலமாக அமைக்கவும், மழை நீர் பாலத்தின் மேல் செல்லாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பாலத்தின் ஒரு பகுதி நகராட்சி எல்லைக்குள்ளும், ஒரு பகுதி வரகூராம்பட்டி ஊராட்சி எல்லைக்குள்ளும் இருக்கிறது. ஆனால், பாலத்தின் கட்டுமான பணியும், பராமரிக்கும் பணியும் ஊராட்சி வசமே உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னையில் தலையிட்டு, பாலத்தை மேம்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post வரகூராம்பட்டியில் பழுதடைந்த பாலம், சாலையை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Varakurampatti ,Thiruchengode ,Tiruchengode Kootapalli ,Antipalayam ,Dinakaran ,
× RELATED லாரியில் கொண்டு வந்த ₹1.13 லட்சம் பறிமுதல்