காரியாபட்டி : காரியாபட்டி பகுதியில் சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.காரியாபட்டி தாலுகா அரசகுளம், ஆவியூர், மாங்குளம் சாலைமறைக்குளம், தேனூர், சொக்கனேந்தல், சித்தனேந்தல் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பயிர் விவசாயம் செய்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்தனர். நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 40 முதல் 50 மூட்டை வரை மகசூல் கிடைக்கும். நல்ல விளைச்சல் ஏற்பட்டால் ஒரு ஏக்கரில் 3 லட்ச ரூபாய் வரை விளைச்சல் கிடைக்கும்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக ஓரளவு அதிகவிளைச்சல் இருந்தாலும், குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வெங்காயத்தை கொள்முதல் செய்கின்றனர். இதனால் தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.20 முதல் ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் எதிர்பார்த்த வருவாய் கிடைக்குமா என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய்க்கு விற்பனை செய்தால்தான் செலவழித்த தொகை போக லாபம் கிடைக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.மேலும் விதைக்காக சேமித்து வைத்த ஏராளமான விவசாயிகளின் வெங்காயம் மழையில் அழுகிவிட்டன. இந்நிலையில் வெங்காய விலை வீழ்ச்சியால் விளைச்சல் இருந்தும் செலவழித்த தொகை கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலன் கருதி நடவடிக்கை எடுத்து இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
The post விளைச்சல் இருந்தும் விலை கிடைக்கலை-வெங்காய விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.