×

பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு பணத்துக்காக அடித்து உதைத்த மகனை காப்பாற்ற கதறிய தாய்: ஆந்திராவில் வைரலான வீடியோவால் வழக்குப்பதிவு

திருமலை: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் தாடேப்பள்ளி பிரம்மானந்தபுரத்தை சேர்ந்தவர் நாகமணி(61). இவரது கணவர் வெங்கடேஸ்வரராவ். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இவர்களுக்கு அரசு சார்பில் வழங்கிய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஸ்வரராவ் உடல் நலம் பாதித்து இறந்துவிட்டார். மகன் சேஷூ மனைவியுடன் வேறு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் நாகமணி தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில் நாகமணி வசித்துவரும் வீட்டை விற்று பணம் தரும்படி சேஷூ  தொடர்ந்து கேட்டு வந்தார். ஆனால் இதற்கு நாகமணி சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சேஷூ கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்து பெற்றெடுத்த தனது தாய் நாகமணியின் வயிற்றில் காலால் எட்டி உதைத்தும் பாத்திரத்தால் தலையில் அடித்தும் கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவி விட்டனர். மேலும்  போலீசாருக்கு வீடியோவை அனுப்பினர். இதனையடுத்து சேஷூ மீது போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அறிந்த மாநில மகளிர் ஆணைய தலைவர் வாசிரெட்டி பத்மா மற்றும் அதிகாரிகள், நாகமணியின் வீட்டிற்கு சென்று நேற்று முன்தினம் நலம் விசாரித்தார். அப்போது தாய் எனக்கூட பார்க்காமல் அடித்து துன்புறுத்திய மகனை கைது செய்யலாமா? என வாசிரெட்டி பத்மா, நாகமணியிடம் கேட்டார். அதற்கு நாகமணி, ‘‘எனது மகனை கைது செய்ய வேண்டாம். என்னை நல்ல முறையில் கவனித்துக்கொள்ளும்படி அறிவுறுத்துங்கள், அதுவே போதும்’’ என கண்ணீர் வீட்டு கதறி அழுதார். இதையடுத்து அதிகாரிகள் சேஷூவை அழைத்து அறிவுரைகளை வழங்கியதோடு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தனர். பெற்றெடுத்த மகன் கொடூரமாக தாக்கியும் கைது செய்ய வேண்டாம் என தாய் கதறியதை பார்த்து அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்….

The post பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு பணத்துக்காக அடித்து உதைத்த மகனை காப்பாற்ற கதறிய தாய்: ஆந்திராவில் வைரலான வீடியோவால் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Petha Manam Pithu ,Andhra Pradesh ,Tirumala ,Nagamani ,Tadepalli Brahmanandapuram, Guntur District, Andhra Pradesh ,Venkateswara Rao ,
× RELATED வெடிகுண்டுகள், கத்தி உள்பட பயங்கர...