புதுக்கடை : குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் திட்டங்கள் அமைத்து பொது மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் குழித்துறை ஆற்று குடிநீர் திட்டமும், சுனாமி குடிநீர் திட்டம் போன்றவை காப்புக்காடு அருகே கொடுவனம் தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த திட்டம் மூலம் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு மட்டுபாவு ஜங்ஷன் வழியாக கிராமங்களுக்கு செல்கிறது. இந்த குழாய்கள் தினமும் உடைவதும் அதை சீர் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. இங்கு குழாய்கள் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதும் வாடிக்கையாகும். அண்மையில் இதுபோல் உடைப்பு எடுத்த போது ஆற்றின் கரையோரத்தில் நின்றிருந்த பெண்களை இந்த தண்ணீர் இழுத்துச் சென்றது. அவர்களுக்கு நீச்சல் தெரிந்ததால் ஆற்றிலிருந்து நீந்தி தப்பினர்.இதுகுறித்து ஊர் மக்கள் அரசுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மாதத்தில் மட்டும் கொடுவனம் தோட்டத்தில் ஒரு எல் பென்ட் பைப் ஆறு முறை உடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. ஆனால் அதிகாரிகள் இந்த உடைந்த பகுதிகளை சீர் செய்வதோடு சரி.அதற்கு நிரந்தர தீர்வு காணாமல் மீண்டும் மீண்டும் தரம் குறைந்த பைப்புகளை போட்டு அதை பராமரிப்பதற்கு தான் முன்னுரிமை கொடுக்கின்றனர் என புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் மீண்டும் உடைந்த பைப்பை சீர்செய்ய ஒப்பந்தக்காரர்கள் வந்துள்ளனர். அவர்களை ஊர் மக்கள் சிறைபிடித்து அதிகாரிகள் வரும் வரை பணி செய்ய விடமாட்டோம் என கூறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் விளாத்துறை கிராம ஊராட்சி துணைத் தலைவர் சிவக்குமார் உட்பட பல உறுப்பினர்கள், ஊர் மக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து குழித்துறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஆனந்தி சம்பவ இடம் சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்….
The post காப்புக்காடு அருகே சாலையில் அடிக்கடி உடையும் குடிநீர் குழாய்கள்-பொதுமக்கள் திடீர் போராட்டம் appeared first on Dinakaran.