×

குவைத்தில் வேலை வாங்கி தருவதாக துபாயில் அடைத்து வைக்கப்பட்ட பெண்: அமைச்சர் முயற்சியால் சொந்த ஊர் திரும்பினார்

நாமக்கல்: குவைத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, துபாயில் அடைத்து வைக்கப்பட்ட நாமக்கல் பெண், அமைச்சர் மதிவேந்தன் முயற்சியால் சொந்த ஊர் திரும்பியுள்ளார். நாமக்கல் அடுத்த ரெட்டிபட்டியை சேர்ந்த திருமணி மகள் கலைச்செல்வி(32). கேட்டரிங் தொழில் செய்து வந்தார். கொரோனாவால் வேலை வாய்ப்பு இழந்து, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டார். இதனால் வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்ய முயற்சி செய்தார். குவைத்தில் இருக்கும் சபீர் என்பவர், அங்கு வேலை இருப்பதாகவும், அதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும், உடனே டூரிஸ்ட் விசா எடுத்து கொண்டுவரும்படி கூறியுள்ளார். இதையடுத்து கலைச்செல்வி, கடந்த 2 மாதத்துக்கு முன் டூரிஸ்ட் விசாவுடன் துபாய் சென்றார். ஆனால், சபீர் கூறியபடி குவைத்தில் வேலைவாங்கி கொடுக்காமல், துபாயில் ஒரு அறையில் கலைச்செல்வியை அடைத்துவைத்துள்ளார்.இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கலைச்செல்வி, இதுகுறித்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு, தனது நிலை குறித்தும், தன்னை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன், திமுக அயலக அணி இணைச்செயலாளர் டாக்டர் யாழினி மூலம் கலைச்செல்வியை மீட்க ஏற்பாடு செய்தார். வெளிநாடு வாழ் தமிழர்கள், இந்திய நலச்சங்கத்தின் அமீரக தலைவர் மீரான், கலைச்செல்வியை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தார். மேலும், அவரது பாஸ்போர்ட்டை பெற்று, தனது சொந்த செலவில் தமிழகம் செல்ல ஏற்பாடு செய்தார். தமிழகம் வந்த கலைச்செல்வி நேற்று முன்தினம் சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார். நேற்று காலை தனது சொந்த ஊரான நாமக்கல் அடுத்த ரெட்டிபட்டிக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவர் கூறியதாவது: குவைத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, என்னை அழைத்து சென்று ஏமாற்றி, ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அமைச்சர் மதிவேந்தனின் பேஸ்புக் பக்கத்தில் என்னை மீட்கும்படி கோரிக்கை வைத்தேன். தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கையால், என்னால் அங்கிருந்து சொந்த ஊருக்கு வரமுடிந்தது. முதல்வருக்கும் என்னை அங்கிருந்து மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்….

The post குவைத்தில் வேலை வாங்கி தருவதாக துபாயில் அடைத்து வைக்கப்பட்ட பெண்: அமைச்சர் முயற்சியால் சொந்த ஊர் திரும்பினார் appeared first on Dinakaran.

Tags : Dubai ,Kuwait ,Namakkal ,Minister ,Madivendan ,
× RELATED சென்னையில் இருந்து துபாய், குவைத்,...