×

செங்கல்பட்டில் பயங்கரம்; தனியார் பள்ளி வகுப்பறையில் கழுத்தறுத்து பெண் படுகொலை: போலீசார் விசாரணை

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளி வகுப்பறையில் கழுத்தறுத்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே, பிரபல தனியார் பெண்கள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு ்வரை உள்ள இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1,500 மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், பள்ளி கட்டிடத்தின் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் தங்கி உள்ளனர். நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால், கட்டிட தொழிலாளர்கள் முன்னதாகவே வேலையை தொடங்கினர். அப்போது, முதல் தளத்தில் தங்கி இருந்தவர்கள் மட்டும் கீழே வரவில்லை. இதனால், சக தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, கொத்தனார் வேலை செய்து வந்த பெண் ஒருவர், வகுப்பறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள்,  உடனடியாக இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அவர்கள், இதுபற்றி   செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த  போலீசார், கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலை செய்யப்பட்டவர், விழுப்புரம் மாவட்டம், காரணை கிராமத்தை சேர்ந்த மலர் (40) என்பதும், இவர் இந்த பள்ளி கட்டிடத்தின் முதல் தளத்தில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அதே மாவட்டம் மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்த கரிகாலன் (45) என்பவர், அதே முதல் தளத்தில் தங்கி மேஸ்திரியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரை தேடியபோது, தலைமறைவானது தெரிந்தது. சக தொழிலாளர்களிடம் விசாரித்தபோது, நேற்று முன்தினம் இரவு கரிகாலனுக்கும், மலருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறினர். தகராறு முற்றியதால், ஆத்திரமடைந்த கரிகாலன், காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து, மலரின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என்றும், போலீசாரிடம் இருந்து தப்பிக்க தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது.  இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, கள்ளக்காதல் தகராறில் மலர் கொல்லப்பட்டாரா அல்லது பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய கரிகாலனை தேடி வருகின்றனர். பள்ளி வகுப்பறையில் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post செங்கல்பட்டில் பயங்கரம்; தனியார் பள்ளி வகுப்பறையில் கழுத்தறுத்து பெண் படுகொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Pangaram ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...