திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மாணவன் உயிரிழப்பை அடுத்து பள்ளிக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு சீல் வைக்க வலியுறுத்தி மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி என்பாரின் மகன் முகிலன்(15) திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 1 படித்து வந்தார். அவர் கடந்த 1ம் தேதி வகுப்புக்கு வராததால், ஆசிரியர்கள் பெற்றோரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் மகனை தேடி பள்ளி விடுதிக்கு வந்தனர்.
எங்கு தேடியும் கிடைக்காததால், திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் பள்ளிக்கு வெளியே உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, முகிலன் வெளியே செல்லவில்லை என்பது உறுதியானது. இந்நிலையில், மோப்ப நாய் பள்ளி வளாகத்திற்குள் உள்ள பாழடைந்த பூட்டிய கிணற்றின் அருகே சுற்றி வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கிணற்றில் பார்த்தனர்.
அதில் கிணற்றுக்குள் முகிலன் சடலமாக மிதப்பது தெரியவந்தது. கிரில் கம்பிகள் போட்டு மூடப்பட்டுள்ள கிணற்றின் ஒரு புறத்தில் மட்டும் சிறிய அளவில் திறந்த பகுதி இருந்தது. தீயணைப்பு மீட்பு படையினர் வந்து கிணற்றில் இறங்கி சடலத்தை மீட்டனர். இதையடுத்து மகன் சாவில் சந்தேகம் உள்ளதால் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யவேண்டும் எனக்கூறி பெற்றோர் வலியுறுத்தினர்.
இந்நிலையில் அரசு உதவிபெறும் பள்ளியின் விடுதியில் தங்கி படித்த மாணவன், கிணற்றில் சடலமாக மீட்க சம்பவத்தையடுத்து பள்ளிக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு சீல் வைக்க வலியுறுத்தியும் மாணவனின் உடலை வாங்க மறுத்தும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post திருப்பத்தூர் அருகே மாணவன் உயிரிழப்பை அடுத்து பள்ளிக்கு இன்று ஒரு நாள் விடுமுறை! appeared first on Dinakaran.
