*இரண்டு மாதங்களாக வீணாகும் குடிநீர்
க.பரமத்த : தொக்குப்பட்டி பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு கடந்த 2003ம் ஆண்டு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ரூ.5 கோடியில் பணிகள் துவங்கப்பட்டது.
இந்த திட்டத்தில் நொய்யல் அடுத்த மறவாப்பாளையம் காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து குழாய் மூலம் க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட 564 கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் செல்லும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வழித்தடங்களான ராஜபுரம்பிரிவு பகுதியில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் வழியில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இரு மாதமாகியும் இந்த உடைப்பை சீரமைக்காததால் தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி தனியாருக்கு சொந்தமான நிலத்தில் ஓடுகிறது.இதனால் க.பரமத்தி ஒன்றிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு முறையான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.இதனால் காவிரி கூட்டு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தும் பலனில்லை. இதனால் தினமும் பல லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வீணாகி வருகிறது.
மேலும் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தொக்குப்பட்டி பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.
