×

அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற போது விபத்தில் 2 குழந்தைகளுடன் தம்பதி உடல் கருகி பலி: தெலங்கானாவை சேர்ந்தவர்களின் சோகம்


டெக்சாஸ்: அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற போது ஏற்பட்ட விபத்தில் தெலங்கானாவை சேர்ந்த 2 குழந்தைகளுடன் தம்பதி உடல் கருகிப் பலியான சம்பவம் பெரும் ேசாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த வெங்கட் – தேஜஸ்வினி தம்பதியினர், தங்களது இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அட்லாண்டா நகரில் உள்ள தங்கள் உறவினர்களைச் சந்தித்துவிட்டு, டல்லாஸ் நகருக்கு நேற்று காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். கிரீன் கவுன்டி பகுதியில் கார் வந்தபோது, தவறான திசையில் அதிவேகமாக வந்த மினி லாரி, இவர்களது கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதில், கார் தீப்பிடித்து எரிந்ததில், காருக்குள் சிக்கிக்கொண்ட குடும்பத்தினர் நால்வரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். கார் முற்றிலும் எரிந்து சாம்பலானதால், மீட்கப்பட்ட உடல்களின் பாகங்களை (எலும்புகள்) தடயவியல் சோதனைக்கு போலீஸ் அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். டி.என்.ஏ பரிசோதனை மூலம் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பின்னரே, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று டெக்சாஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்து தகவலறிந்த அவர்களது குடும்பத்தினர், ஒன்றிய, மாநில அரசுடன் தொடர்பு கொண்டு உயிரிழந்தவர்களின் நிலவரம் குறித்தும், அவர்களின் உடல்களை கொண்டு வருவது குறித்தும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றிய அரசின் தரப்பில், அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம், டெக்சாஸின் அன்னா நகர் அருகே நடந்த கோரமான விபத்தில், காரில் பயணம் செய்த ஆரியன் ரகுநாத், ஃபரூக் ஷேக், லோகேஷ் பலசர்லா மற்றும் தர்ஷினி வாசுதேவன் ஆகிய நான்கு இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் டெக்சாஸில் நடந்த மற்றொரு கார் விபத்தில், இந்திய வம்சாவளி தம்பதியினர் மற்றும் அவர்களது மகள் ஆகியோர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இதுபோன்ற தொடர் சம்பவங்கள் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

The post அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற போது விபத்தில் 2 குழந்தைகளுடன் தம்பதி உடல் கருகி பலி: தெலங்கானாவை சேர்ந்தவர்களின் சோகம் appeared first on Dinakaran.

Tags : America ,Telangana ,Texas ,Venkat ,Tejaswini ,Hyderabad, Telangana ,
× RELATED முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும்...