
புதுடெல்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்காக இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள பதிவில் “இந்த தருணத்தில் முக்கியமான நபராக இருக்கும் சுப்மன் கில் அற்புதமான இன்னிங்ஸ் ஆடினார். கேப்டனாக இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்ததற்குப் பாராட்டுக்கள். ரிஷப் பன்ட், கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்தனர். குறிப்பாக 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் அணுகுமுறை இங்கிலாந்து அணியை இந்த போட்டியில் இருந்து நீக்கிவிட்டு அவர்களை வேறு மாதிரியாக விளையாட வைப்பது என்பதாக இருந்தது. இந்த போட்டியில் என்னை அதிகம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது இந்திய அணியின் பவுலர்கள் வீசிய `லென்த்’துதான்.
குறிப்பாக ஆகாஷ் தீப் ஒரு சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். எனது கருத்துப்படி ஜோ ரூட் விக்கெட்டை அவர் வீழ்த்தியதுதான் இந்தத் தொடரின் சிறந்த பந்தாக இருக்கும். முகமது சிராஜ், ஜாண்டி ரோட்ஸ் போலப் பிடித்த கேட்ச்சை நான் ரசித்தேன்’’ என்று கூறி இருக்கிறார். ஜாஸ் டங் அடித்த ஷாட்டை சிராஜ் அபாரமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். இதனை குறிப்பிட்டு தான் முகமது சிராஜை ஜான்டி சிராஜ் என அழைத்திருக்கிறார் சச்சின். கோலி தனது பதிவில், “எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய அணி மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. பயம் இல்லாமல் ஆடியதோடு, இங்கிலாந்து அணியை சுவரோடு சுவராக வைத்து அழுத்தி இருந்தீர்கள். சுப்மன் கில் தனது பேட்டிங்கின் மூலம் அணியை முன் நின்று வழிநடத்தினார். முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் இந்த பிட்ச்சில் பந்து வீசியதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள பதிவில், “இளம் வீரர்கள் ஒரு பாதையைக் கண்டுபிடித்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆகாஷ் தீப் பயமில்லாமல், விளையாட முடியாத அளவுக்குப் பந்துவீசினார். சுப்மன் கில் தனது வயதைக் கடந்த முதிர்ச்சியை வெளிப்படுத்தினார். அடுத்து இந்தத் தொடரை வெல்லுங்கள் வீரர்களே!’’ என்று வாழ்த்தியிருக்கிறார்.
The post இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிகிறது: சிராஜுக்கு ஸ்பெஷல் பெயர் வைத்த சச்சின் appeared first on Dinakaran.
