×

ரவுடி ஸ்ரீதரின் கார் டிரைவருக்கு அடைக்கலம் அதிமுக வட்ட செயலாளர் எஸ்.பி.குமார் உட்பட 2 பேர் கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை

சென்னை: கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்ட பிரபல தாதா ஸ்ரீதர் தனபாலின் கார் டிரைவரான ரவுடி தினேஷூக்கு அடைக்கலம் கொடுத்ததாக, அதிமுக வட்ட செயலாளர் உட்பட 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் தனபால். பிரபல தாதாவான இவர் மீது கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழகம் முழுவதும் உள்ளது. போலீசாருக்கு பயந்து தாதா ஸ்ரீதர் தனபால் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். பின்னர் கம்போடியா நாட்டில் பதுங்கி இருந்த ஸ்ரீதர் தனபால் கடந்த 2017ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீதர் தனபாலுக்கு வலதுகரமாக காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடிகளான தினேஷ், தணிகா, பொய்யாகுளம் தியாகு ஆகியோர் செல்பட்டு வந்தனர். தாதா ஸ்ரீதர் தனபால் தற்கொலைக்கு பிறகு அந்த இடத்தை பிடிக்க 3 ரவுடிகளும் முயன்றது. இதனால், இவர்களுக்கிடையே கோஷ்டி மோதல், கொலை முயற்சி அடிக்கடி ஏற்பட்டு வந்தது. இதில் ஸ்ரீதர் தனபாலுவின் கார் டிரைவராக இருந்த ரவுடி தினேஷ் தன்னை காஞ்சிபுரத்தில் பெரிய ரவுடியாக காட்ட கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார். . ரவுடி தினேஷ் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ரவுடிகளை கைது செய்ய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்து பிரபல ரவுடி படப்பை குணா 2 நாட்களுக்கு முன்பு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு பிரபல தாதா ஸ்ரீதர் தனபாலின் வலதுகரமாக செயல்பட்டு வந்த பொய்யாகுளம் தியாகுவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பிரபல ரவுடி தினேஷூன் கூட்டாளியாக சென்னை சாலிகிராமம்  தசரதபுரம் பகுதியை சேர்ந்த எஸ்.பி.குமார் இருந்து வருகிறார். இவர் அதிமுகவில் 129வது வட்ட செயலாளராக உள்ளார்.  போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்று தெரிந்து தனது கூட்டாளியான தினேஷூக்கு அடைக்கலம் கொடுத்தும், நிதி உதவிகளையும் எஸ்.பி.குமார் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிமுக வட்ட செயலாளராக உள்ள எஸ்.பி.குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எஸ்.பி.குமாருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்துள்ளது. அதேபோல், ரவுடி தினேஷூக்கு உதவியதாக துரைப்பாக்கத்தில் பதுங்கிருந்த ரவுடி பரணி என்பவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post ரவுடி ஸ்ரீதரின் கார் டிரைவருக்கு அடைக்கலம் அதிமுக வட்ட செயலாளர் எஸ்.பி.குமார் உட்பட 2 பேர் கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : AIADMK district ,SP Kumar ,Rowdy Sridhar ,Chennai ,Rowdy Dinesh ,Dada Sridhar Dhanapal ,Cambodia ,SB Kumar ,Dinakaran ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட...