சென்னை: பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் டிஜிபி அலுவலகம் முதல் தீவுத்திடல் வரை இன்று பேரணி நடைபெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.
அதனை வெளிப்படுத்தும் வகையில், இன்று மாலை 5 மணிக்கு எனது தலைமையில் பேரணி நடைபெற உள்ளது. அதன்படி, சென்னையிலுள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்குபெறும் இந்த பேரணி தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் அருகில் நிறைவு பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post டிஜிபி அலுவலகம் முதல் தீவுத்திடல் வரை இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக சென்னையில் இன்று பேரணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.
