×

சத்துக்கள் அதிகம் இருக்கும் கீரையில் அதிக லாபம்: குன்றக்குடி கேவிகே தலைவர் தகவல்

காரைக்குடி, ஏப்.17: கீரை விவசாயத்தின் மூலம் மகத்தான மகசூலை அள்ளலாம் என குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், கீரையில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஏ.கே. சி, ரிபோபிளவின், நியாசின், சோடியம், இரும்புச்சத்து, கால்சியம், மாங்கனீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்பட பல்வேறு சத்துக்கள் உள்ளன. தண்டுக் கீரையை பொறுத்தவரை விதைத்த 25 நாட்களில் கிள்ளி எடுக்க வேண்டும். பின் 7 நாட்கள் இடைவெளியில் 10 முறை அறுவடை செய்யலாம். எக்டேருக்கு 30 டன் மகசூல் எடுக்கலாம். பசலைக் கீரை நடவு செய்ய 2 மாதங்களில் அறுவடை செய்யலாம். எக்டேருக்கு 4000 முதல் 6000 கிலோ கிடைக்கும். குழிமுறையில் நடவேண்டும்.

ஒரு குழிக்கு 10 கிலோ மக்கிய தொழு உரம் இடவேண்டும். பாலக்கீரை விதைத்த ஒரு மாதத்தில் அறுவடை செய்யலாம். இதன் வாழ்நாள் 3 மாதம். ஒரு எக்டேருக்கு தொழு உரம் 25 டன்கள், தழைச்சத்து 60 கிலோ, மணிச்சத்து 60 கிலோ போடவேண்டும். புதினா கீரை நடவு செய்த ஒரு மாதத்திலிருந்து வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம். ஒரு எக்டேரில் 2000 கிலோ கிடைக்கும். முருங்கைக் கீரை மகத்தான பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது. ரத்த சோகை, வயிற்றுப்புண், கண் நோய், ஆஸ்துமா, மார்பு சளி, சுவாசக் கோளாறுகளுக்கு சிறந்தது. கீரையின் தேவை அதிகரித்து வருவதால் கீரை விவசாயத்தில் ஈடுபடுவதன் மூலம் அதிக மகசூல் அள்ளலாம் என்றார்.

The post சத்துக்கள் அதிகம் இருக்கும் கீரையில் அதிக லாபம்: குன்றக்குடி கேவிகே தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kundrakudi KVK ,Karaikudi ,Senthurkumaran ,Kundrakudi Agricultural Science Institute ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை