
ராமேஸ்வரம்: பாம்பனில் இருந்து நேற்று முன்தினம் மன்னார் வளைகுடா பகுதிக்கு நூற்றுக்கணக்கான நாட்டுப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இரவு 10 மணியளவில் தனுஷ்கோடி அருகே இந்திய கடல் எல்லையோரம் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, மூன்று கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் பாட்டில்களை வீசி விரட்டியடித்தனர். பின்னர் படகை சிறைபிடிக்க சுற்றிவளைத்த இலங்கை கடற்படையின் பிடியில் சிக்காமல் மீன்பிடி வலைகளை கடலிலேயே வெட்டி விட்டு மீனவர்கள் அங்கிருந்து தப்பினர்.
கடற்படையின் ரோந்து கப்பல் விரட்டி வந்து மோதியதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த இன்னாசி முத்துவின் படகு உடைந்தது. படகை சுற்றிவளைத்து பிடித்த இலங்கை கடற்படையினர், படகில் ஏறி மீனவர்களை இரும்பு குழாயால் சரமாரியாக தாக்கிவிட்டு மீன்களை எல்லாம் அள்ளிச் சென்றனர். இதில் மீனவர்கள் உமையராஜ், சேந்தி, ஆரோக்கிய கைடன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. கென்னடி என்பவரை தலையில் தாக்கியதில் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது. இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறல் நடவடிக்கை ஒட்டுமொத்த நாட்டுப்படகு மீனவர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post இலங்கை கடற்படை அட்டூழியம்: பாம்பன் மீனவர்கள் மீது இரும்புக் குழாயால் தாக்குதல் appeared first on Dinakaran.
