மதுரை, ஏப். 9: மதுரை ஊமச்சிகுளம் அருகே ஓய்வு பெற்ற டிஎஸ்பி சடலமாக மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ஊமச்சிகுளம் அருகே வீரபாண்டி ரோஜாவீதியை சேர்ந்தவர் துரைசிங்கம்(63). இவர் சிவகங்கை மாவட்ட ஆயுதப்படையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். பின்னர் மதுரை மாவட்டத்தில் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று பணி செய்து வந்தார். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், பணி ஓய்வு பெற்று விட்டு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மகன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் ஊமச்சிகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஊமச்சிகுளம் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் கடந்த ஏப்.3ம் (வியாழன்) தேதிக்கு பிறகு அவர் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை என கூறப்படுகிறது. உடலை மீட்கச்சென்ற போது, அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதையடுத்து உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
The post ஊமச்சிகுளம் அருகே ஓய்வு டிஎஸ்பி அழுகிய நிலையில் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.
