×

வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு விவகாரம் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தமிழ்நாடு அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் சிலருக்கு திருவான்மியூரில் 3457 சதுர அடி மற்றும் 4763 சதுர அடி வீட்டுமனைகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒதுக்கீடு செய்தது. இந்த ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அப்போதைய வீட்டுவசதித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன் உள்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2013ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அமைச்சர் பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், இந்த வழக்கில் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அமைச்சர் என்பதால் வழக்கு தொடர ஆளுநர் மட்டுமே அனுமதி அளிக்க முடியும். ஆனால், சபாநாயகர் அனுமதி அளித்ததுள்ளார். இது விதிகளுக்கு முரணானது என்று வாதிட்டார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

The post வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு விவகாரம் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Housing Board ,Minister I. Periyasamy ,Chennai ,DMK ,Tamil Nadu Housing Board ,Thiruvanmiyur ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்