×

சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற அமைப்பை அரசு நிதியில் தொடங்கியுள்ளதாகக் கூறி, துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் இளங்கோவன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

புகாரில், விதிமுறைகளுக்கு முரணாக தொடங்கப்பட்ட இந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தன்னை சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு ஆகியவற்றின்கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், எந்த பண பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ் திலக் ஆஜராகி, மனுதாரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் உள்ளன. எனவே, வழக்கை ரத்து செய்ய கூடாது என்று வாதிட்டார்.இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Jehanathan ,Chennai ,R. ,University Staff Association ,Vice Chancellor ,Dinakaran ,
× RELATED கோயில்களில் முதல் மரியாதை என்பது...