×

நாட்டில் 22 லட்சம் ஓட்டுனர்கள் பற்றாக்குறை: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: நாட்டில் 22லட்சம் ஓட்டுனர்கள் பற்றாக்குறை நிலவுவதாக ஒன்றிய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
உலக வங்கியின் அறிக்கையின்படி இந்தியாவில் 22லட்சம் ஓட்டுனர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றது. நாட்டில் சரியான ஓட்டுனர் பயிற்சி வசதிகள் இல்லாததால் ஏராளமான விபத்துக்கள் நிகழ்வதோடு உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8லட்சம் பேர் சாலைவிபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.

இதில் பெரும்பாலானவை சரியான பயிற்சி பெறாத ஓட்டுனர்களால் ஏற்படுகின்றது. நாடு முழுவதும் ஓட்டுனர் பயிற்சி நிறுவனங்களை படிப்படியாக அமைப்பதற்காகவும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1600 பயிற்சி நிறுவனங்களை அமைப்பதற்காகவும் அரசு திட்டமிட்டுள்ளது. பயிற்சி நிறுவனங்களை அமைப்பதற்காக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ரூ.4,500 கோடி திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலமாக சுமார் 60லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.

ஓட்டுனர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பிராந்திய ஓட்டுனர் பயிற்சி மையங்கள் மற்றும் ஓட்டுனர் பயிற்சி மையங்கள் ஆகியவற்றை அமைப்பதற்கு பொருத்தமான திட்டங்களை அனுப்புமாறு அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

The post நாட்டில் 22 லட்சம் ஓட்டுனர்கள் பற்றாக்குறை: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Nitin Gadkari ,New Delhi ,Union Transport Minister ,Lok Sabha ,World Bank ,India.… ,Dinakaran ,
× RELATED ஊரக வேலைத் திட்டத்தில் காந்தியின்...