அரியலூர், மார்ச் 15: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு: மக்களைநாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை ஒருநாள் வட்டம் அளவில் கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்கின்றனர்.
அதில், மாவட்டத்தில் மார்ச்-2025ம் மாதத்திற்கான “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம், ஆண்டிமடம் வட்டத்தில் மார்ச் 19 அன்று காலை 9 மணி முதல் மார்ச் 20 காலை 9 மணிவரை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு துறைச் சார்ந்த மாவட்டநிலை அலுவலர்கள் அரசின் அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள உள்ளனர். முகாம் நாளன்று குறுவட்ட அளவில் பட்டா மாறுதல் முகாமும் நடைபெற உள்ளது.
அதன்படி, மார்ச் 18 வரை பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் என்று குறிப்பிட்டு மனுக்களை ஆண்டிமடம், வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கலாம். மேலும், மார்ச் 19 அன்று மாலை 4.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்வின்போதும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.
The post ஆண்டிமடம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் வரும் 19, 20ம் தேதிகளில் நடக்கிறது appeared first on Dinakaran.
