துபாய்: சாம்பியன்ஸ் டிராபி பைனலில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றால், நிச்சயமாக முதலில் பேட்டிங்கை தான் தேர்வு செய்யும் என அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறி இருக்கிறார். குரூப் சுற்று ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட் கைப்பற்றிய வருண் சக்கரவர்த்தி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். சாம்பியன்ஸ் டிராபியில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திய சக்கரவர்த்தி நியூசிலாந்து அணியை திக்குமுக்காட செய்தார். அந்த போட்டியில் 2வதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சை சந்திக்க முடியாமல் திணறினர். ஆனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 362 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து தென்ஆப்பிரிக்கா அணி சேசிங் செய்த போது, சிறப்பாக பந்துவீசி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது. குறிப்பாக அந்த போட்டியில் சான்ட்னர் அபாரமாக பந்துவீசி நியூசிலாந்தை பைனலுக்கு அழைத்துச் சென்றார். எனவே இந்தியாவுக்கு எதிரான இறுதி போட்டியிலும் அதே பாணியை கடைபிடிக்க நியூசிலாந்து அணி தீர்மானித்துள்ளது. ஆனால் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தால், நியூசிலாந்து அணி சேசிங் செய்வது மிகவும் சிரமமாக இருக்கும். இந்திய அணியின் ஜடேஜா, வருண், குல்தீப், அக்சர் ஆகியோரது சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மீண்டும் சொதப்ப வாய்ப்புள்ளது. குறிப்பாக அன்ஆர்த்தோடெக்ஸ் முறையில் பந்து வீசும் வருண் சக்கரவர்த்தியை சமாளிப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும். எனவே அதை தவிர்ப்பதற்காக நியூசிலாந்து அணி டாஸ் வென்றால் நிச்சயமாக பேட்டிங் தான் தேர்வு செய்யும் என மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
The post டாஸ் வென்றால் பேட்டிங் தான்: நியூசி. மாஜி கோச் பேட்டி appeared first on Dinakaran.
