×

நாமக்கல் அருகே பரபரப்பு பூட்டிய வீட்டிற்குள் தாய், 2 குழந்தைகள் மர்ம சாவு: ஆன்லைனில் ரூ.50 லட்சம் இழப்பு என கடிதம் எழுதி வைத்து விட்டு கணவர் தலைமறைவு

நாமக்கல்: நாமக்கல்லில் பூட்டிய வீட்டினுள் தாய், 2 குழந்தைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில், ஆன்லைனில் ரூ.50 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடிதம் எழுதி வைத்து விட்டு, தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பெரியமணலியை சேர்ந்தவர் பிரேம்ராஜ் (38). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் வங்கியில், இன்சூரன்ஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோகனபிரியா (34). இவர்களுக்கு பிரணிதா (6) என்ற மகளும், பிரணித்(2) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 3 ஆண்டாக, இவர்கள் நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள பதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் வரை, பிரேம்ராஜின் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் பாரி, ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது, வீட்டுக்குள் மோகனபிரியா மற்றும் அவரது 2 குழந்தைகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து நாமக்கல் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் தரையில் உயிரிழந்த நிலையில் கிடந்த 3 பேரின் சடலங்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையின் போது, வீட்டில் இருந்த ஒரு பெரிய நோட்டில், பிரேம்ராஜ் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், ஆன்லைன் ஆப்பில், கடந்த ஒரு வாரத்தில் ரூ.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த கடனை எப்படி கட்டுவது என தெரிய வில்லை. எங்களை மன்னித்து விடுங்கள் என எழுதியுள்ளார். இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். பிரேம்ராஜின் செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்ட போது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பிரேம்ராஜ் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தாய், 2 குழந்தைகள் தூக்கில் தொங்கியதற்கான அடையாளங்கள் வீட்டில் தென்படுகிறது. அவர்களது கழுத்தில் தூக்கி மாட்டி இறந்ததற்கான காயங்கள் உள்ளது. வீட்டில் உள்ள துணிகளும் கலைந்து கிடக்கிறது. 3 பேரின் சாவில் பிரேம் ராஜூக்கு என்ன தொடர்பு என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தபட்டு வருகிறது,’ என்றனர்.

The post நாமக்கல் அருகே பரபரப்பு பூட்டிய வீட்டிற்குள் தாய், 2 குழந்தைகள் மர்ம சாவு: ஆன்லைனில் ரூ.50 லட்சம் இழப்பு என கடிதம் எழுதி வைத்து விட்டு கணவர் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால்...