தேனி, மார்ச் 4: பெரியகுளம் அருகே வடுகபட்டியில் பூண்டு சந்தையில் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக வாக்கு வாதம் ஏற்பட்ட போது வியாபாரி மயங்கி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். பெரியகுளம் அருகே வடுகபட்டியில் தேவர் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் ராஜேஸ்குமார்(34). இவர் கொடைக்கானல் பகுதியில் இருந்து பூண்டு கொள்முதல் செய்து பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் உள்ள பூண்டு சந்தையில் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் ராஜேஸ்குமார் வடுகபட்டி பூண்டு சந்தையில் விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, இவரது கடை அருகே மற்றொரு பூண்டு கடை நடத்தி வரும் முருகன் என்பவருக்கும், ராஜேஸ்குமாரின் சித்தி விஜயாவிற்கும் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக வாக்கு வாதம் ஏற்பட்டது. இதுசம்பந்தமாக ராஜேஸ்குமார், சித்திக்கு ஆதரவாக முருகனிடம் பேசினார். அப்போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ராஜேஸ்குமார் திடீரென மயங்கி விழுந்தார். இவரை பெரியகுளம் அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராஜேஸ்குமாரின் மனைவி ஜெயந்தி அளித்த புகாரின்பேரில் பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வாக்குவாதம் செய்த வியாபாரி மயங்கி சாவு appeared first on Dinakaran.
